வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னை, ஜூன் 26 - வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் வழியே நகரக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாண் படிப்பு தரவரிசை: கடலூர் மாணவர்கள் சாதனை
கோயம்புத்தூர், ஜூன் 26 - கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று திவ்யா, ஹம்தா மெஹதாப், இலக்கியா, பிரித்திவிராஜ், கார்த்திகா, தீபிகா, கனிமொழி, தாரணி, பிரிமாதெலி, முரளிதரன் ஆகிய மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களில் 7 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள். முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளின் தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் கடத்தல் வழக்கு எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சென்னை, ஜூன் 26 - திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்திச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டனர். முன்னதாக, இந்த கடத்தல் தொடர்பான புகாரில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். கேவி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ‘பூவை’ ஜெகன்மூர்த்தி மற்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ஜெயராமன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதற்கிடையே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது வியாழனன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குலக் கல்வியால் பாதிப்பு : நடிகர் விஜயகுமார் வேதனை
சென்னை, ஜூன் 26 - சென்னை புரசைவாக்கத்தில், கலைஞர் பிறந்த நாள் விழா அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில், மூத்த திரைக்கலைஞர் விஜயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “என் ஊர் பட்டுக்கோட்டை. நான் படிக்கும்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். அப்போதுதான் குலக்கல்வி முறை அமலுக்கு வந்தது. பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் வேலை பார்க்க வேண்டும். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் நான் என் படிப்பை 8-ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டேன். இந்தக் குலக்கல்வி முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர் அனைவரும் படிக்க வேண்டும் என மதிய உணவு மட்டுமல்ல காலை உணவும் வழங்குகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். கல்விக்காக முதல்வர் ஸ்டாலினை விட வேறு யாரும் இப்படிச் செயலாற்ற முடியாது” என்று குறிப்பிட்டார்.
ஜூன் 30 முதல் மின்சார பேருந்துகள் சென்னை:
சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 5 பணிமனைகளில் இருந்து 120 மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து சேவையை ஜூன் 30 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ராமதாஸ் மன வருத்தம் சென்னை:
“நான் வழங்கிய பொறுப்புதான் நிரந்தர பொறுப்பு. நான் விரும்பியது போல், என்னால் தொடங்கப்பட்ட கட்சி பாமக. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்த இந்த கட்சிக்கு நான்தான் தலைவர். நிர்வாகிகளுக்கு நான் வழங்கிய பொறுப்பு நிரந்தரமானது. போஸ்டர் கிழிப்பு சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இந்த நிலையில், எங்களது 60 ஆவது மண விழாவிற்கு, மகன் வரவில்லை என்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்? மன வருத்தம் அளிக்கும். அப்படித்தான் எனக்கும் உள்ளது” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
பாஜகவின் ‘பி’டீம் யார்?
சென்னை: பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜகவின் ‘பி டீம்’ என்றுதான் கூற முடியும். பெரியாரை விமர்சித்த பின்னரும் விஜய் அமைதி காப்பது ஏன்? பெரியாரை விஜய் முழுமையாக ஏற்றுக் கொண்டாரா என்ற சந்தேகம் எழுகிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் வேள்விக்கு உத்தரவு மதுரை:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் குடமுழுக்குகளில் தமிழில் வேள்வி குண்டம் நிகழ்வுகள் நடத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
விதிவிலக்கல்ல சென்னை:
“போதைப்பொரு ட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான். இதில் நடிகர்கள் என்பதால் விதிவிலக்கு இல்லை” என்று திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நாட்டு வெடிகுண்டு வீசி கொலை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு ஆகாஷ் என்பவர் காதை அறுத்த சம்பவத்தில் பழி தீர்க்க முகேஷ் என்ற இளைஞர் மீது பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.