what-they-told

img

இந்நாள் செப்டம்பர் 06 இதற்கு முன்னால்

1965 - இந்தியப் படைகள் பன்னாட்டு எல்லைக்கோட்டைக் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, இந்திய-பாகிஸ்தானிய போர் தொடங்கியது. 1965 ஆகஸ்ட்(அல்லது  ஜூலை)யில் ஆப்பரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் சுமார் முப்பதாயிரம் பாகிஸ்தான் வீரர்கள், காஷ்மீர் பொதுமக்கள் போன்ற தோற்றத்துடன் ஜம்மு, காஷ்மீருக்குள் ஊடுருவியதையடுத்து ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்தே இந்தியப் படையினர் எல்லையைக் கடந்து தாக்கத்தொடங்கினர். காஷ்மீர் அரசர் ஹரி சிங் இந்தியாவுடன் இணைந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் அதைத் தடுப்பதற்காக 1947இல் பாகிஸ்தான் தொடுத்தது முதல் காஷ்மீர் போர் என்று அழைக்கப்படுகிறது. அப்போது காஷ்மீரின் மூன்றிலொரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிவிட்டாலும், மீதமுள்ள பகுதிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்துவிட்டன. 1962இன் இந்தோ-சீனப் போருக்குப்பின் இந்தியப் படைகளின் பலம் சற்றுக் குறைந்து, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த காலத்தில், இந்தியப் படையைவிட எண்ணிக்கையில் குறைவானாலும், பாகிஸ்தான் படைகள் ஆயுத பலத்தில் சற்றே முன்னேறியவையாக இருந்தன. இந்தியப் படைகளின் பலம் மீண்டும் உயர்வதற்குள் காஷ்மீரைக் கைப்பற்றுவது என்ற நோக்கத்திலேயே, ஆப்பரேஷன் ஜிப்ரால்டர் மேற்கொள்ளப்பட்டது. கி.பி.711இல், ஹிஸ்பானியாவின் (தற்போதைய ஸ்பெயின்) லைபீரியத் தீபகற்பத்திற்குள் நுழைய ஜிப்ரால்டர் துறைமுகத்தை உமையாத் கலீஃபகம் பயன்படுத்திக்கொண்டதை நினைவுகூர்ந்தே, இந்த ஊடுருவலுக்கு ஆப்பரேஷன் ஜிப்ரால்டர் என்று பாகிஸ்தான் பெயரிட்டது. ஆப்பரேஷன் ஜிப்ரால்டரை, பாகிஸ்தான் 1950களிலேயே திட்டமிட்டு, வாய்ப்புக்காகக் காத்திருந்தது. முதல் காஷ்மீர் போரின் முடிவில், ஐநாவால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தக் கோட்டில், இந்தியப் படைகளால் பாதுகாக்கப்படாத ‘ஓட்டைகளை’ இந்த ஊடுருவலுக்காகக் கண்டுபிடிக்க, ஆப்பரேஷன் நுஸ்ராத் என்பதும் செயல்படுத்தப்பட்டது. ஊடுருவலை உள்ளூர் மக்களின்மூலம் அறிந்துகொண்ட இந்தியப் படைகள் ஆகஸ்ட் 15இல் போர்நிறுத்தக் கோட்டைத்தாண்டித் தாக்குதலைத் தொடங்க, செப்டம்பர் 1இல் ஆப்பரேஷன் கிராண்ட் ஸ்லாம் என்ற பெயரில் பாகிஸ்தான் பதில் தாக்குதலைத் தொடங்கியது. பன்னாட்டு எல்லையை இந்தியப் படைகள் கடந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறி, 17 நாட்கள் நடைபெற்ற இதுவே, இரண்டாம் உலகப்போருக்குப்பின் (அப்போதுவரை) மிக அதிகக் கவச வண்டிகள் பயன்படுத்தப்பட்ட போராகியது. சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தலையீட்டில், எல்லை மாற்றங்களின்றி, செப்டம்பர் 23இல் போர்நிறுத்தம் ஏற்பட்டு, 1966இல் தாஷ்கண்ட் ஒப்பந்தமும் உருவானது. போர் தொடங்கிய செப்டம்பர் 6, பாகிஸ்தானில் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.