விருதுநகர் மாவட்டம் எச்ஐவியால் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு, குடியிருக்க வீடு, அரசு வேலை- நீதிமன்ற உத்தரவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா மற்றும் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தங்கப்பாண்டி யின் மனைவி முத்து (23) என்பவருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவதாக கர்ப்பம் அடைந்த முத்து மருத்துவ பரிசோத னைக்காக 2018 டிசம்பரில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதால் ஓ+ ரத்தம் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் பெற்று சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முத்து விற்கு ஏற்றி உள்ளனர். ரத்தம் ஏற்றியதை தொடர்ந்து முத்துவிற்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கர்ப்பிணிப்பெண் சென்றபோது 2018 டிசம்பர் 17 அன்று ரத்த பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். பரிசோதனை முடிவில் முத்து விற்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த மருத்துவர்கள் சிவகாசி மருத்துவமனையில் வாங்கி வந்த எச்ஐவி தோற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. 2016-ல் ரத்த தானம் கொடுத்த ரமேஷ் என்ற நபருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவரை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறிவிட்டது. அதே நபர் மீண்டும் இரத்தம் கொடுத்ததால்தான் முத்துவிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மட்டுமல்ல, அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ரத்த நன்கொடைகள் பெறும் போது எச்ஐவி, மஞ்சள் காமாலை, மலேரியா உள்ளிட்ட ஐந்து வகையான பரிசோதனைக்குப் பிறகு மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 896 ரத்த வங்கிகளும் 500க்கும் மேற்பட்ட ரத்த பரிசோதனை மையங்களும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்த நன்கொடையாளர்களும் உள்ளதாக கூறப்படு கிறது. அரசு மருத்துவர்கள் பயிற்சி பெற்ற அரசு செவிலியர்கள் மூலம் சேமித்த ரத்தங்களை முறையாக பரிசோதித்து பாதுகாப்பது அரசின் கடமை ஆகும். ஆனால் சிவகாசி மருத்துவ மனையில் ரத்தம் சேகரித்து முத்துவிற்கு ஏற்று வதற்கு அனுப்பியது தனியார் ஒப்பந்தகாரர்கள் என்பதும் தமிழகத்தில் பல ரத்த வங்கிகள் தனியார் மூலம் செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் முத்துவிற்கு உரிய உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். கருவில் உள்ள அவரது குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் உயர் சிகிச்சை அளித்திட வேண்டும். உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். அதே சமயம் பணியி லிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்பட அரசு மருத்துவ துறை அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து வலுவான போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகே நீதிமன்றத்திற்கு வழக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இந்நிலை யில் வழக்கு முறையாக நடைபெறுவதை கண்காணித்து அவ்வப்போது சட்ட ரீதியான ஆலோசனைகளை வழக்கறிஞர் வி.ஏ.விஸ்வநா தன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில் 26.7.2019 அன்று பாதிக் கப்பட்ட முத்துவிற்கு ரூபாய் 25 லட்சம் அரசு மூலம் நஷ்ட ஈடும், 450 சதுர அடியில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட கழிப்பறை யோடு கூடிய வீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.சுந்தர் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். நீதி பதிகளின் இத்தீர்ப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. அரசு தரப்பு வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியும் பாராட்டுக்குரியதாகும்.
இப்பிரச்சனையில் ஆரம்பம் முதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க விருது நகர் மாவட்ட குழுவும் மாநிலச் செயலாளர் லட்சுமி, மாவட்டத் தலைவர் உமா, மாவட்டச் செயலாளர் தெய்வானை ஆகியோர் பாதிக்கப்பட்ட முத்துவிற்கு ஆதரவாகவும் உதவியாகவும் பாதுகாப்பாகவும் வழக்கு வெற்றி பெறும் வரை விடாமுயற்சியுடன் இருந்தனர். சட்ட ரீதியாக வழக்கறிஞர் வி. ஏ. விஸ்வநாதன் அவர்கள் மிகப்பெரிய உதவி செய்துள்ளார். அனைவருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநில குழுவின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட முத்துவிற்கு தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் வந்த பொழுதும் நீதியை நிலைநாட்டுவதற்காக உறுதியாக நின்று சாட்சியமளித்ததை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு வரவேற்கிறது. இதுபோன்று சென்னை மாங்காட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு கே.எம்.சி மருத்துவமனை முன்பாக காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் வலுவான போராட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய காரணத்தினால் சம்பந்தப்பட்ட சகோதரிக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் பார்க்க வேண்டும். உயிரைப் பாதுகாப்பதற்காக கொடுக்கக்கூடிய இரத்த வங்கிகளை பாது காக்கும் பொறுப்பை தனியார்வசம் கொடுக்கும் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வன்மை யாக கண்டிக்கிறோம். இனிவரும் காலங்களில் உரிய முறையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரத்த நன்கொடைகளை பெறுவதும், முறையாக பராமரிப்பதும், உயிரோடு விளையாடாமல் உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசையும் சுகாதாரத் துறையையும் இதன் மூலம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.