சென்னை,ஆக. 25- வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்க ளில் திங்களன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.