what-they-told

img

கரைக்கு அப்பால் கடல் காக்க ஓர் உடன்படிக்கை

சிதம்பரம் இரவிச்சந்திரன்

இருபதாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் சர்வதேச கடற்பரப்பைக் காக்க ஐநா தலைமையகத்தில் வரலாற்று உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் கடல்களைப் பாதுகாக்க சட்டப்பூர்வ செயல்முறையை (legal framework) அமைக்க ஐநா உறுப்புநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.  நியூயார்க் ஐநா தலைமையகத்தில் அறை எண் இரண்டில் கூட்டத்தின் நிறைவு நாளன்று இந்த செய்தியை சர்வதேச கடல்களைக் காக்க அமைக்கப்பட்ட ஐநா அமைப்பின் தலைவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ரினா லீ அறிவித்தார். உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளைப் பாராட்டிய லீ இது உலக மக்கள் அனைவரின் வெற்றி என்று குறிப்பிட்டார். இறுதி நேரங்களில் 48 மணி நேரம் இடைவிடாமல் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் மூலம் டிசம்பர் 2022இல் கனடா மாண்ட்ரீலில் நடந்த காப்15 உலக உயிர்ப் பன்மயத்தன்மை உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட முக்கிய இலக்கான 30x30 என்ற கனவு நனவாகிறது. 30x30 என்பது பூமியின் 30 சதவீத நிலப்பரப்பு மற்றும் 30 சதவீத கடற்பரப்பைக் மனிதக் குறுக்கீடுகளில் இருந்து காப்பாற்ற உருவாக்கப்பட்ட திட்டம். நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடற்பரப்பு பூமியின் மொத்த கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியது.
யாருக்கும் சொந்தமில்லை ஆனால் எல்லோருக்கும் சொந்தம்
இப்பரப்பு சர்வதேசப் பரப்பு (open waters/highseas) என்பதால் இது எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதில்லை. ஆனால் எல்லோருக்கும் சொந்தமானது என்ற நிலை இருந்தது. இந்த புதிய உடன்படிக்கையின் மூலம் இந்நிலை மாறும் என்று நம்பப்படுகிறது. இந்தஒப்பந்தத்தினால் கரைக்கு அப்பால் இருக்கும் கடற்பரப்பின் இயற்கைவளங்கள், வன உயிரினங்கள், மரபணு வளங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாற வழி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெரும் பரப்பிலான பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலங்களை (Marine Protected Areas MPAs) உருவாக்கமுடியும். மாநாட்டின் முடிவில் காலநிலை மாற்றம் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்க ஐநாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் (COP) போல கரைக்கு அப்பால் இருக்கும் கடல்களைக் காப்பாற்றவும் உறுப்புநாடுகளின் கூட்டமைப்பைப் (Conference of Parties COP) அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூடி உறுப்புநாடுகள் மேற்கொண்ட கடல்சார் மேலாண்மை மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை செயல்திட்டங்கள் பற்றி விவாதித்து இலக்குகளை நிர்ணயிக்கும். கடல்களே மனிதன் உட்பட பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனில் 80 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன. கடல்களே புவிக்கோளின் 95 சதவீத உயிர்ச்சூழல் மண்டலத்தை (Biosphere) கொண்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கார்பன் உறிஞ்சும் தொட்டியாக (Carbon sink) செயல்படுகின்றன. இவை உலகில் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடின் பெரும் பகுதியை உட்கிரகித்துக் கொள்கின்றன. கடல்கள் இனி கண்காணிக்கப்படும் என்றாலும் எல்லைகளற்ற இந்தப் பெரும் நீர்ப்பரப்பு துண்டு துண்டாக, எந்தவித வரையறைகளும் இல்லாமல் பலவீனமான நிலையில் பல பன்னாட்டு பணக்கார நிறுவனங்களால் சூறையாடப்பட்டுவருகிறது. புதிய உடன்படிக்கையின் மூலம் கடல்களைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்க தற்போதைய புதிய விதிமுறைகள் அமலாக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை விட அதிக சுரண்டலுக்கு உள்ளாகும் இப்பரப்பு இனி பாதுகாக்கப்பட வழி ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை உருவாக்க உலக நாடுகள் தங்களுக்கு இடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை கருவியாகப் பயன்படுத்தி சீனாவின் தலைமையில் நடந்த மான்ட்ரீல் காப்15 மாநாட்டில் எட்டப்பட்ட 30x30 இலக்கை விரைவாக அடையமுடியும் என்று பசுமை அமைதி இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் வெரானிகா ப்ராங்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உயர் குறிக்கோளுடன் செயல்பட்ட நாடுகள்
.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையை பியூ (Pew) தொண்டு நிறுவனம் வரவேற்கிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க கடல் பாதுகாப்பு மண்டலங்கள் உதவும் என்று இந்த அமைப்பின் கடல் மேலாண்மைப் பிரிவின் இயக்குனர் லிஸ் கரன் (Liz Karan) கூறுகிறார். சீனா, ஐரோப்பிய ஒன்றியம், யு கே மற்றும் யு எஸ் ஆகிய நாடுகளின் உயர் குறிக்கோள் கூட்டமைப்பு (The High ambition coalition) இந்த உடன்படிக்கை ஏற்பட முக்கியக்காரணமாக செயல்பட்டன. இவை மாநாட்டின் இறுதி நாட்களில் உலக நாடுகளுக்கு இடையில் பிரிவினை விதைகளை விதைக்காமல் ஒற்றுமையை ஏற்படுத்தின. அந்நாடுகள் தங்களுக்கு இடையில் இருந்த பிரச்சனைகளை விட்டுக்கொடுத்து முன்வந்து உடன்படிக்கை உருவாக வழி ஏற்படுத்திக் கொடுத்தன. உலகின் தென் கோள நாடுகள் (Global South) ஒப்பந்தம் நீதியான முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய உதவும் அம்சங்களை உடன்படிக்கையில் இடம்பெறச் செய்தன. ஓராண்டிற்குள் உறுப்பு நாடுகள் இந்த பேச்சுவார்த்தைகளுக்காக ஐநா தலைமையகத்தில் மூன்றாவது முறையாக ஒன்றுகூடின. 2022 ஆகஸ்டில் கூடிய அமர்வில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கடந்த பிப்ரவரி 20 முதல் இரு வாரம் நடந்த இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்
.இம்மாநாட்டில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் மரபணு வளங்கள் (Marine Genetic Resources MGR) பற்றிய தகவல்களைப் பரிமாறுதல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பகிர்ந்துகொள்ள இறுதிகட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. ஆழ்கடல் ஸ்பாஞ்சுகள், தாவர மற்றும் விலங்கு மிதவைகள், பவளப்பாறைகள், கடற்களைகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை இந்த மரபணு வளங்களில் அடங்கும். இவை அறிவியல் ஆய்வுகள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியில் இன்று அதிகம் பயன்படுகின்றன. கடல் சூழல் மண்டலங்களை அமைக்க உதவும் செயல்முறைகள், கரைக்கு அப்பால் இருக்கும் கடல் சூழலில் பல்வேறு காரனங்களால் உருவாகும் தாக்கம் பற்றிய ஆய்வுகளை நடத்தத் தேவையான மாதிரிகளை உருவாக்குதலில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த உடன்படிக்கையை விரைந்து நடைமுறைப்படுத்த 42 மில்லியன் டாலர் நிதியுதவி செய்ய வாக்குறுதி அளித்துள்ளது
கடலில் நடப்பது கரைக்குத் தெரியும்
கண் காணா தொலைவில் இருக்கும் கடல் நீர்பரப்பில் நிகழ்வது என்ன என்று தெரியாத நிலை இதன் மூலம் மாறும்என்று உலக வன நிதியத்தின் ஆய்வாளர் ஜெஸ்ஸிகா பேட்டில் (Jessica Battle) கூறுகிறார். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள கடல்கள் இனிவருங்காலத்தில் காப்பாற்றப்படும் என்ற புதிய நம்பிக்கை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.