what-they-told

img

மதுரை மலர் சந்தையில் மல்லிகை விலை உயர்வு

மதுரை, செப்.4- மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி மதுரை அருகே உள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மதுரை மல்லி நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேல் இங்கு விற்பனை ஆகிறது.  அதுமட்டுமன்றி ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை உள்ளது. மதுரை விமான நிலையம் மூலமாக நாள் தோறும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மதுரை மல்லிகையின் வரத்து குறைந்துள்ளது.  மதுரை மல்லிகை கிலோ ரூ.2,300, பிச்சி ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.80 என அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து, மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து மிக குறைவாக உள்ளது. மேலும் தற்போது அடுத்தடுத்து முகூர்த்த நாள்கள் இருக்கின்ற காரணத்தால் பூக்களின் விலை உயர்வாக உள்ளது. இது மேலும் ஒரு சில நாள்கள் நீடிக்கும் என்றனர்.

;