ஆயிரமாயிரம் உயிர்களைக் காவுவாங்கி வரும் பெருந்தொற்றுக் கொள்ளை நோயான ’கோவிட்-19’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், கணிக்கமுடியாததாக இருக்கிறதா? இந்தியாவில், தமிழ்நாட்டில் நிலவுகின்ற பீதியைக் களைந்து, பாதிப்பைக் கட்டுப்படுத்த சமூக மட்டப் பரிசோதனையின் அவசியம், அவசரமானதாக நம் முன் நிற்கிறது.
நடப்பு நிலவரத்தோடு அதன் பொருத்தப்பாட்டைப் பற்றி இங்கு பேசுவோம்.
1. நோய் அறிகுறிகள் இல்லாமலேயே பரிசோதனை (+ve) எத்தனை பேர்?
2. மிதமான அறிகுறிகளுடன் உடல் பாதிப்பு இல்லாதவர்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை (+ve)?
3. பரிசோதனை (+ve) பாசிட்டிவோடு அதி தீவிர நோய்க் குறிகளுடன் எத்தனை பேர்?
இந்த வரையறுப்பு, இரண்டு காரணங்களுக்காக முக்கியம்.
1. அதிதீவிர பெருங் கொள்ளை நோய் என்று கட்டமைக்கப்படும் கொரோனா போன்ற தொற்று ( நோய் வந்தால் 2% இறப்பு என்று கணிப்பில்) உண்மையிலேயே அப்படி இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்தவும், சமூகப் பரவலில் மேற்கூறப்பட்ட முதல் இரண்டு அடுக்குகளில் உள்ளவர்கள் அதிகமிருப்பின், மூன்றாவது அடுக்கில் உள்ள நோயரை கவனிக்க சரியான திட்டமிடலும், மூன்றாவது அடுக்கிற்கு செல்லக்கூடிய இடர்பாடுகள் (vulnerability) நிறைந்த மக்களை அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகவும் அவர்களைக் காக்க செயல்திட்டம் வகுக்கவும் முடியும்.
2. சமூகப்பரவலைக் கண்டறிய சமூக அளவில் பரிசோதனை செய்தல் என்பது, நோயின் பரவும் வேகம் மற்றும் மேலும் வைரசின் வீரியத்தை உணர்த்தும்.
3. சமூகப் பரவலைக் கண்டறிய நாட்டில் ஒரு மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள நகர, கிராமத்தில் மக்களைத் தேர்வு செய்து, எத்தனை பேரைத் தேர்வுசெய்தால் பரிசோதனை முடிவுகள் புள்ளியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதனை உள்ளடக்கியே இருக்கவேண்டும்.
மேலும், மருத்துவமனைக்கு உள்ளேயே அறிவியல் ஆய்வுகள் மேற்கொண்டால் அந்த ஆராய்ச்சி முடிவுகள் ஒருதலைச்சாய்வாக அமையும். ஏனெனில், மருத்துவமனையில் உள்ளவர்களில் நோய்த்தொற்றின் மூன்றாம் அடுக்கில் இருப்பவர்கள்தான் அதிகம். எனவே சமூகப் பரிசோதனையானது எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.
4. மேலும், பெருங் கொள்ளைத் தொற்று, உலகில் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் வரவில்லை. அதனால், முதல், இரண்டாம் நாடுகளில் வந்த தரவுகள் முக்கியம்; ஆனால், அதையே முதன்மைப்படுத்த முடியுமா என்றால், முடியாது. ஏனெனில் வைரஸ் பரவலுக்கும் அதன் தாக்கத்திற்கும் வைரசின் உயிரியல் தன்மை மட்டுமோ, மனிதர்களின் எதிர்கொள்ளும்திறன் மட்டுமோ காரணங்கள் அல்ல. ஆனால், அவை முக்கிய காரணங்கள் என்றாலும் எந்த உத்தியில் (Strategy) அங்குள்ள அரசாங்கம் அப்படி முடிவெடுத்தது, அங்குள்ள மருத்துவ கட்டமைப்பு சிக்கல்கள் என்னென்ன, இறப்பு விகிதம் அதிகம் என்றால் அதற்கு மேற்கூறப்பட்ட காரணிகளோடு நோயரின் உடல் நிலை (இரண்டு அல்லது மூன்று உடல் நோய்களோடு உள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்களா), அந்த நாட்டின் சராசரி இறப்பு விகிதம் என்ன, அந்த நாட்டின் தட்பவெப்ப சூழல் என்ன என்பதையெல்லாம் ஆய்வுக்கு கணக்கில் எடுக்க வேண்டும்.
மற்ற நாடுகளுக்கும் அந்தந்த நாட்டிற்கான பொதுவான மற்றும் குறிப்பான காரணங்கள் இருக்கும். மற்ற நாடுகளின் காரணங்கள், அந்தந்த நாட்டின் ஆய்வுக்கு அவசியம். அவற்றை அப்படியே பொதுமைப்படுத்துவது, நோய்த் தடுப்புக்கு மட்டுமல்ல, அதனால் அரசு எடுக்கப்போகும் கொள்கை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் தீர்மானிப்பதாக அமையும்.
5. மிக முக்கியமானது வைரசைப் பற்றியது. வைரசை ஒரு உயிரியல் agent அல்லது entity-ஆக மட்டும் பார்க்க முடியுமா, என்றால் கூடாது. வைரசுக்கு ஒரு சமூகப் பரிமாணம்( social aspect) உண்டு. அதாவது, அது எல்லா மனிதர்களையும் ஒரே விதத்தில் தாக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட நோய்த் தொற்று, யாரை அதிகம் பாதிக்கிறது? Vulnerable group - இடர்பாடுகளை அதிகம் சந்திக்கும் மக்களைத்தான். உதாரணமாக, கொரோனா நோய்த்தொற்றினால் அதிக பாதிப்பு யாருக்கென்றால், நுரையீரல் நோய், ஆஸ்துமா பிராங்கைடிஸ் உள்ளவர்க்குதான் என்றும், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்தான் என்றும் கூறுகின்றன ஆய்வுகள்.
இதனால், கல் உடைக்கும் வேலை, குவாரிக்கு அருகில் இருப்பவர்கள், பெருநகர சாலைகளில் வேலைசெய்பவர்கள், நுரையீரலைப் பாதிக்கும் நச்சுப் புகை, ரசாயனப் பொருள்கள் நிறைந்த தொழிற்சாலைத் தொழிலாளிகள், அவர்கள் வாழும் சூழல், புகைமண்டலமாக மாசு அதிகமான சூழல், தினக்கூலித் தொழிலாளர்க்கு தொடர் பொருளாதார அழுத்தத்தால் இரத்த அழுத்தம் அதிகமாதல், சமூகவிலகலைக் கடைப்பிடிக்க முடியாமல் வேலைக்குச் செல்லுதல், வீட்டுச் சூழலில் சமூகவிலகலைக் கடைப்பிடிக்க முடியாத நிலை இதெல்லாம் இருக்கும்.
அதிக இடர்பாடுகளில் உள்ள ஒருவரின் நுரையீரல், ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நோய்த் தொற்று ஏற்படுவது அதிகம். அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். இதுதான் அந்த வைரஸ், சமூக entity-ஆக அதாவது, சமூகத்தில் எளிதில் பரவுவதற்கான வாய்ப்புடன் செயல்படுகிறது என்பதற்கான உதாரணம்.
எனவே நாம் வைரசின் உயிரியல், சமூக கோணங்களை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அது, ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும். அதை இணைத்தே பார்க்க வேண்டும்.
6. மேலும், மிக முக்கியமான ஒன்று, வைரசின் மரபணு ஆராய்ச்சிகள். அது சீனாவின் வுஹான், இத்தாலி, தென்கொரியா இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் ஒரே மாதிரி உள்ளதா? மரபணு மாற்றம் அடைந்துவிட்டதா? அப்படி மாறியிருப்பின் அதன் விளைவுகள் என்ன? அது வைரசின் வீரியத்தைக் குறைத்திருக்கிறதா? நோய்த் தொற்றின் வேகம், பரவல் எப்படியிருக்கிறது என்பனவற்றைத் தீர்மானிக்கிறதா என்பதும் முக்கியம்.
இறுதியாக, இந்த கருத்துக்களை ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்து தொற்றைக் கட்டுப்படுத்துவது, அவசியம் வாய்ந்ததாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைகிறது. எதையும் தொடர்புபடுத்திப் பார்க்காமல், ஒன்றுடன் ஒன்று உள்ள இணைப்பைப் பார்க்காமல், வைரசை ஒரு உயிரியல் நோய் பரப்பியாக மட்டுமே பார்ப்பது, அது மாறாமல் அப்படியே இருக்கும் என்பதும் அறிவியல்பூர்வமான வழிமுறையா என்பதை நாம் ஆய்வு செய்யவேண்டும்.
அறிவியல் ஆய்வாளர்கள், நோய்த் தொற்று வல்லுநர்கள், மருத்துவர்கள் கூறும் கருத்துகள், நோய்த் தடுப்பு முறைகளுக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கை முடிவுகளுக்கும் வழிவகுக்கும் . அந்த நடவடிக்கைகளுக்கு அறிவியல் பரிமாணம் மட்டுமல்ல, சமூகப் பரிமாணமும் உண்டு. அது இணைந்தே இருக்கும். அது நோயைத் தடுக்கிறதா, மக்களை பாதிக்கிறதா என்பதையும் நாம் ஆய்வுசெய்ய வேண்டும்.