1776 - அரசியல் பொருளாதாரத் துறையின் முதல் மாபெரும் படைப்பு என்று புகழப்படும், ‘த வெல்த் ஆஃப் த நேஷன்ஸ்’ என்ற, ஆடம் ஸ்மித் எழுதிய நூல் வெளியானது. நாடுகளின் செல்வங்கள் எப்படி உருவாயின என்பது குறித்த உலகின் முதல் ஆய்வு நூலான இதுவே, ‘கிளாசிக்கல் எகனாமிக்ஸ்’ என்னும் மரபுப் பொருளாதாரத்தின் அடிப்படை நூலாகக் குறிப்பிடப்படுகிறது. தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் வெளியான இந்நூலில், உழைப்புப் பிரிவினை, உற்பத்தித்திறன், கட்டுப்பாடற்ற சந்தை ஆகியவை குறித்தெல்லாம் ஸ்மித் குறிப்பிட்டிருக்கிறார். கார்ல் மார்க்சின் மூலதனம் நூலுக்கான ஆய்வில், மிகப்பெரும் பங்களித்த நூல்களுல் இது முக்கியமானது. உழைப்பின் மதிப்பைப் பற்றி ஸ்மித் குறிப்பிடவில்லை என்பது உட்பட, அடிப்படை முரண்பாடுகள் இருந்தாலும், ஸ்மித்தின் ஆய்வுகளை மிகுந்த மதிப்பிற்குரியவையாக் குறிப்பிடும் மார்க்ஸ், மூலதனம் நூலில் ஏராளமான இடங்களில் இவரை மேற்கோள் காட்டியுள்ளார். இயற்பியலில் நியூட்டனின் ‘பிரின்சிப்பியா மேத்தமேட்டிக்கா’, உயிரியலில் டார்வினின் ‘ஆன் த ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷஸ்’, வேதியியலில் லவாய்சியரின் ‘எலிமெண்ட்டரி ட்ரீட்டைஸ் ஆன் கெமிஸ்ட்ரி’ ஆகிய நூல்கள் ஏற்படுத்தியதைப்போன்ற திருப்பத்தை, பொருளாதாரத்தில் ஏற்படுத்தியதாகப் புகழப்படும் இந்த நூலினாலேயே, ‘பொருளாதாரத்தின் தந்தை’ என்று ஸ்மித் புகழப்படுகிறார். அவரின் வாழ்நாளுக்குள்ளேயே 5 பதிப்புகள் வெளியான இந்நூல், அதன்பின் ஏராளமான பதிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே, 1759இல் இவர் எழுதிய, நன்னெறியும் - ஒழுக்கமும், தனிப்பட்ட உரிமைகளும் - இயற்கைச் சுதந்தரமும், குடும்ப உரிமைகள் அல்லது பொருளாதாரமும் - அரசினதும், மனிதர்களதுமான உரிமைகள் அல்லது அரசியலும் என்ற தலைப்புகளில் விவாதிக்கும், ‘த தியரி ஆஃப் மாரல் செண்ட்டிமெண்ட்ஸ்’ என்ற நூலே, பின்னாளைய படைப்புகளில் இவரது பார்வையை விளக்குவதாக அமைந்தது. தன் தனிப்பட்ட நூலகத்திலேயே சுமார் 1,500 நூல்களைக் கொண்டிருந்த ஸ்மித், எழுதிக்கொண்டிருந்த மெய்யியலில்(தத்துவம்) ‘எஸ்ஸேஸ் ஆன் ஃபிலாசஃபிக்கல் சப்ஜெக்ட்ஸ்’, வானியலில் ‘எ ஹிஸ்ட்டரி ஆஃப் ஆஸ்ட்ரானமி’ என்னும் இரு நூல்களை முடிப்பதற்குள் இறந்துவிட, அவை பின்னாளில் கட்டுரைகளாக வெளியாயின. இங்கிலாந்தின் நாணயத் தாள்களில் படம் இடம்பெற்ற முதல் ஸ்காட்லாந்துக்காரர் ஸ்மித்-தான் என்பதுடன், ஒரு சிறு கோளுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.