செங்கல்பட்டு,மார்ச் 19- செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட இடைத்தரகர் ஒருவரைக் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவருகின்றது. இந்த அலுவலகத்திற்குட்பட்ட 78 கிராமங்களைச் சார்ந்தவர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, பிறப்பு இறப்பு பதிவு, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று (மார்ச் 19) செங்கல்பட்டைச் சார்ந்த இடைத்தரகர் ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் பத்திரபதிவுக்காக காத்திருந்த பொதுமக்களையும் மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து ஒரு பத்திரத்தைப் பதிவு செய்துத்தருமாறு வலியுறுத்தினார். அப்போது அலுவலர்கள் டோக்கன் பெற்று வரிசையில் வருமாறு கூறினர். இதனால் கோபமடைந்த ராமகிருஷ்ணன் ஊழியர்களைத் தகாத வார்த்தையில் திட்டினார். அவரிடம் இருந்த டோக்கனை வாங்கிப் பார்த்தபோது அந்த டோக்கன் 17ம் தேதியை டோக்கனாகவும், வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்த டோக்கனாகவும் இருந்தது. இதையடுத்து பத்திரம் பதிவு செய்பவர் நேரில் வரவேண்டும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்தி ரம் அடைந்த ராமகிருஷ்ணன் பதிவுத்துறை ஊழியர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். உடனடியாக பத்தி ரத்தைப் பதிவு செய்து தரவேண்டும் எனவும் கூறினார். இதுகுறித்து சார்பதிவாளர் செந்தூர்பாண்டியன் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்மந்தம் இல்லாத நபர்களிடம், ஆவணத்தைப் பதிவு செய்து தருகின்றேன் என்று கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறான ஆவணத்தை பதிவு செய்துதரக்கோரி சார்பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை மிரட்டிதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு நகரக் காவலர்கள் ராமகிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.