tamilnadu

img

விழுப்புரம்: பாலியல் தொல்லையால் 13 வயது சிறுமி தற்கொலை  

விழுப்புரம் மாவட்டத்தில் வேன் டிரைவர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரைப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் 13 வயது சிறுமி. இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  கடந்த 22 ஆம் தேதி அச்சிறுமி, கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பாண்டியன் மாணவியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.  

அதனைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல்அதிகாரி ரேவதி வழக்குப்பதிவு செய்து பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.    

இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று மதியம் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டைவிட்டு சென்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.     அதற்குள் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைதொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை கல்குவாரி பள்ளத்திலிருந்து மீட்டனர்.    

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.