சென்னை,ஜூலை 27- விளை நிலங்களுக்குள் வரும் யானைகளை தடுக்க தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கும் புதிய முயற்சியை தமிழக வனத்துறை மேற்கொண்டுள்ளது. சோதனை முயற்சியாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அதிக யானைகள் இருக்கும் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக இந்த சோதனை முயற்சி நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களை பார்த்தால் யானைகள் அச்சப்படும் என்பதால், யானைகள் ஊர்களுக்குள் வராமல் தடுக்க தேனீக்களின் கூடுகளின் மூலம் வேலி அமைக்கும் திட்டம் ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான செலவும் குறைவாக இருக்கும் நிலையில், இயற்கை சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது. எனவே இத்திட்டத்தை முதற்கட்டமாக சோதனை முயற்சியாக செய்ய திட்டமிட்டுள்ள தமிழக வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.