tamilnadu

விழுப்புரம் , கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

விழுப்புரத்தில் திமுக கூட்டணி வெற்றிக் கொண்டாட்டம்!
விழுப்புரம், மே 24- விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட வி.சி, வேட்பாளர் ரவிக்குமார் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 068 ஒட்டுகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். இறுதிச் சுற்று முடிந்தவுடன் ஒட்டு எண்ணும் மையத்திலிருந்து வெளியே சென்று  ஆதராளவர்கள் மற்றும் கூட்டணி கட்சினர் நடத்திய வெற்றி  கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர், மீண்டும் ஒட்டு எண்ணும் மையத்திற்கு ரவிக்குமார் திரும்பினார். விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணி நடந்து கொண்டிருந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டு எண்ணும் மையத்தில் காத்திருந்தார். பின்னர், 11.30 மணிக்கு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரவிக்குமாரிடம், மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார்.

ஓசூரில் அதிமுகவை வீழ்த்திய திமுக 
கிருஷ்ணகிரி, மே 24- ஓசூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா 1,15,027 வாக்குகள் பெற்றார்.  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் துணைவியாரும் அதிமுக வேட்பாளருமான ஜோதியை 23, 213 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா 9 வது சுற்று வரை பின்தங்கினார். அதன்பிறகு ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலைபெற்றார். இதனால், கடைசி சுற்றான 26வது சுற்றின் அறிவிப்பை வெளியிடாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காலம் தாழ்த்தினர். இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர், உதவித் தேர்தல் அலுவலரான விமல்ராஜ் திமுக வேட்பாளர் சத்யாவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழை வழங்கினார். அப்போது மாவட்ட திமுக பொருப்பாளரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான செங்குட்டுவன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும் வேப்பனப் பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

திருநங்கையை ஏமாற்றிய விவகாரம் உதவி ஆய்வாளர் பணிநீக்கம்
திருநெல்வேலி, மே 24- திருநங்கை அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதன் பணி நீக்கம்  செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் விஜய சண்முகநாதன், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, நகை , பணத்தை மோசடி செய்துவிட்டார்’  என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திருநங்கையின் புகார் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு  விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கை   நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சராத்கரிடம் சமர்ப்பிக்கட்டது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதனை  புதன்கிழமை இரவு பணி நீக்கம் செய்து  சரக டிஐஜி கபில்குமார் சராத்கர் உத்தரவிட்டுள்ளார்.
 

உணவுப் பாதுகாப்பு முகாம்
நாகப்பட்டினம், மே 24- நாகப்பட்டினம் அவுரித்திடலில், வியாழக்கிழமை, நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கோடைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் முகாமுக்குத் தலைமை வகித்தார். புள்ளியல் துறை சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ப.அந்துவன்சேரல் முகாமைத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அரசு செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பா.இராணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகைக் கிளைத் தலைவர் என்.பாபுராஜ் ஆகியோர் பேசினர். உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் நன்றி கூறினார்.