நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டைத் திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டைத் திகழ்ந்து வருகிறது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
அதுமட்டுமின்றி அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மணிகளும் பல கிடைக்கப் பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-