விருத்தாச்சலம்,ஜூலை 7- விருத்தாச்சலம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றை தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் மகன், மகள் அபகரிக்க முயல்வதாக அப்பள்ளியின் தலைவர் இளவரசன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பெரிய வடவாடியில் செந்தில் அறக்கட்டளை சார்பில் 2005-06ஆம் ஆண்டு தனியார் பள்ளி துவங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இங்கு 1,600 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த டாக்டர் இளவரசன், செந்தில் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் இந்தப் பள்ளியை அபகரிக்க முயற்சி செய்யும் வகையில், அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் இளவரசனின் ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே அமைச்சரும் இளவரசனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செந்தில் அறக்கட்டளையின் தலைவர் இளவரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் பள்ளிக்கும், அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பள்ளிக்கு 70 ஏக்கர் நிலமும், ரூ.100 கோடி மதிப்பில் சொத்துகளும் உள்ளன. இந்த நிலையில் அமைச்சரின் மகள் திவ்யா, மகன் பிரவீன் ஆகியோர் பள்ளியின் சொத்துகளை அபகரிப்பதற்காக என்னிடம் விலை பேசினார்கள். நான் விலைக்குத் தர முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் ஜூலை 5 ஆம் தேதி மாலை 7 மணிக்கு அடியாட்களை வைத்து பள்ளியில் நுழைந்து அலுவலகத்தை அடித்து உடைத்து, இங்கிருந்த ஊழியர்களைக் காயப்படுத்தி சென்றுவிட்டனர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்து என்னை அச்சுறுத்தி பள்ளியை அபகரிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து அமைச்சரிடம் தொலைபேசியில் பேசியபோது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டார். இவ்விவகாரத்தை முதல்வர் கவனத்துக்குக்கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.