திருவள்ளூர், ஆக. 27 - தலைமுறை தலைமுறையாக வாக்குரிமை கிடைக்காததால் வாக்களிக்க முடியாமல் இருளர் இன மக்கள் உள்ளனர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள அரியத்தூர் ஊராட்சி. இங்குள்ள அப்துல்கலாம் தெருவில் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் 39 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் இவர்கள் வசிக்கும் குடிசைகளுக்கு 15 வருடங்களாக பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மக்களுக்கு அரசு நிர்வாகம் ஆதார், வாக்காளர் அட்டை போன்ற எந்த ஆவணங்களையும் வழங்காமல் உள்ளது. இதன்காரணமாக இந்த மக்களால் தொகுப்பு வீடுகளையும் பெற முடியவில்லை. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 9 குடும்பங்களுக்கு மட்டும் பட்டா கிடைத்தது. இங்குள்ள மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் உள்ளனர். 80 வயது முதியவர் கூட வாக்குரிமை இன்றி உள்ளார். இதனால் நாடாளுமன்றம், சட்ட மன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் இவர்களால் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். எழுத படிக்க தெரியாத இருளர் இன மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் இதுவரை எந்த ஒரு அரசு முகாமும் நடத்தப்பட்டதில்லை. இந்நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் தலைமையில் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் வியாழனன்று (ஆக-27) திருவள்ளூர் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.