tamilnadu

img

திருநாவலூர் காவல்துறைக்கு கண்டனம்

உளுந்தூர்பேட்டை ஜூன் 17- தொடர்ச்சியாக கொலைவெறி தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியப் போக்குடன் செயல்படும் திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஜூன் 17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களை கைது செய்யாமல் அவர்களிடம் பணம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களை வெளியில் நடமாட விடும் அதிகாரிகளை கண்டித்தும், ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைக்கும் பிரச்சினைகளில் மட்டும் நடவடிக்கை எடுப்பதும் அதேபோல மாட்டு வண்டிகளை மணல் எடுக்க சொல்லி தூண்டிவிட்டு மாமுல் வசூலிப்பது போன்ற செயல்களில் மட்டும் ஈடுபடும் திருநாவலூர் காவல்துறையை கண்டித்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் உரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின்மணி உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் கே.தங்கராசு, அய்யனார் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன்,  ஆர்.சீனுவாசன்மற்றும் மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.