கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி சி. சரவணன் முன்பு 20.06.2025 அன்று விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று 23.06.2025 அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மேல்முறையீடு செய்யப்பட்டு, அதனை விசாரிக்க நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர். விரைவில் விசாரணைக்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே, அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.