tamilnadu

img

பென்சன் பணம் சரியான வங்கிக் கணக்கிற்கு செல்லவில்லை.... நிதித்துறைச் செயலர்-கருவூல ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை
இருபது சதவீத பென்சன் பணம் சரியான வங்கிக்கணக்கிற்கு சேரவில்லை என்று கூறி, தமிழகத்திலுள்ள கருவூலங்களில் புதிய கணினி மென்பொருளை முறையை அமல்படுத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக நிதித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்திலுள்ள கருவூலங்களில் automatic treasury bill passing system (ATBPS) முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டு தமிழக நிதித்துறைfinancial and human resource management system (IFHRMS)  என்ற முறையில் விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்ட பணிகளை தொடங்கி யது. இதன் மூலம் கருவூலங்களில் வழங்கபடும் ஊதியங்களை  தனியார் நிறுவனங்கள் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திற்கு ரூ.2000 கோடி கொடுக்கப் பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறை  ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் சோதனை முறையில்  நடைபெற்றது. இதில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இந்த முறையை பயன்படுத்துவதால் 2020 ஆகஸ்ட் 31  அன்று இருபது சதவீத பென்சன் பணம் சரியான கணக்கிற்கு சென்று சேரவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய மென்பொருள்  முறையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். பழைய மென்பொருள் முறையைப் பின்பற்றுவதற்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது 
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்குகுறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலர் மற்றும் தமிழக கருவூல ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.