tamilnadu

img

குருமூர்த்தியின் இழி பேச்சு

சென்னை, ஆக. 25- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில்   துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நமது நாட்டில் 30சதவீதம் பெண்கள் மட்டுமே பெண்மையுடன் இருப்ப தாகவும், அப்படிப்பட்ட பெண்மையுடைய பெண்களை மட்டும் தெய்வமாக தான் மதிப்பதாகவும் பேசியுள்ளார். அவரது இத்தகைய மநு அதர்மத்தை நிலை நிறுத்தும் ஆணாதிக்கப்பேச்சுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனங் களை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் அவர் இப்படிப்பட்ட கருத்து களை பேசியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் கருதுகிறது. கடந்த காலத்தில் சங்கராச்சாரியார் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என பேசியுள்ளார். எஸ்.வி. சேகர், பத்திரிகை துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண்கள் அத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொண்டே அப்பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் எனப் பேசினார். சாக்ஷி மகராஜ் என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு இந்துப் பெண்ணும் 4 குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். ஒரு சங்கராச்சாரியார், ஒவ்வொரு இந்துப் பெண்ணும் 10 குழந்தைகளை பெற்று இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்றார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள் அடங்கிக் கிடந்து பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக இருக்க வேண்டும் என்ற இத்தகைய மநுவாதக் கருத்தின் தொடர்ச்சியே குருமூர்த்தியின் பேச்சு. 

பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும், ஆணுக்கு நிகராக வாழ்வதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமைகளை வழங்கி இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி மநு அதர்மத்தை சட்டமாக்க முயற்சிக்கும் பாஜகவின் கொள்கையே குருமூர்த்தி பேச்சின் வெளிப்பாடு.  பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தி தன்னுடைய பேச்சை வாபஸ் வாங்கவில்லை எனில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சட்ட ரீதியான போராட்டத்தை துவங்கும். மேலும் குருமூர்த்தியின் இத்தகைய பேச்சை கண்டித்து 27.08.2019 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து பெண்கள் அமைப்புகளையும் இணைத்து மாவட்டங்கள் தோறும் கண்டன இயக்கங்களை நடத்திடும். இந்த இயக்கத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், ஜனநாயகத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும், மாற்று பாலினத்தவரும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.