tamilnadu

img

அன்று காலனித்துவத்துக்கு எதிராக போராடினோம்; இன்று அதற்கு துணை நின்றவர்களுக்கு எதிராக.... மும்பையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

மும்பை:
முன்பு காலனியத்துக்கு எதிராக நாம் போராடினோம் என்றால் இன்று நடத்துவது காலனியத்துக்கு துணை நின்றவர்களுக்கு எதிராக என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.மும்பையில் கலை இலக்கிய கல்வித்துறைகளில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டோரின் ‘மும்பை கூட்டமைப்பு’ சார்பில் பிப்.1,2 தேதிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஞாயிறன்று பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘வகுப்புவாதத்துக்கு எதிரான தேசிய போராட்டம்’, என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர், “நாட்டின் அரசமைப்பு சாசனமும் ஜனநாயக மாண்புகளும் வகுப்புவாத சக்திகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பற்ற மனங்களை ஊடுருவிச் செல்லும் கடைசி ஆயுதமாகும். அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானசட்டங்களுடன் மத்திய அரசு கடந்து செல்லும்போது இந்த நாட்டின் உயர்வான மதிப்புகளை உயர்த்திப்பிடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை மக்களுக்கு உள்ளது.  மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்து கேரள அரசும் மக்களும் வலுவான நிலைபாட்டை மேற்கொண்டுள்ளன. சட்ட ரீதியாக போராடுக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக, அமைதியான முறையில் தெருவில் போராட்டம் நடத்துக என்பதே கருப்புச் சட்டத்திற்கு எதிராக செய்ய முடிந்துள்ளது. இந்த போராட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திய மாநிலம் கேரளம். கேரளத்தின் இத்தகைய முயற்சிகள் மற்ற மாநிலங்களையும் இதுபோன்ற நிலைபாடு எடுக்க வைத்துள்ளது” என்றார்.          

இக்கருத்தரங்கம் மும்பை நாரிமன் பாயின்டில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் நடைபெற்றது. சனியன்று நடந்த முதல்நாள் நிகழ்வில் ‘போராட்டங்களில் முன்னணிப் போராளிகளாகும் மாணவர்கள்’, என்கிற தலைப்பில் அய்ஷி கோஷ், ஆயிஷா காதர், பரிசய் யாதவ், அபிஷேக் நந்தன், அர்பா அபுபக்கர் உள்ளிட்டோர் பேசினர்.

;