tamilnadu

img

‘யெஸ்’ வங்கியை சூறையாடிய 10 கார்ப்பரேட் நிறுவனங்கள்... ரூ.34 ஆயிரம் கோடி கடனைக் கட்டவில்லை

மும்பை:
பிரபல தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’, மூலதன நெருக்கடி, வராக்கடன் அதிகரிப்பால், திவாலாகும் நிலைக்குப் போனது. இதனால், இயக்குநர்கள் குழுவைக் கலைத்து விட்டு, நிர்வாகப் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டுள்ளது. ரூ. 50 ஆயிரம் வரைதான் பணம்எடுக்க முடியும் என்று வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.மேலும், வங்கியின் நிறுவனர் ராணாகபூர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், சந்தேகத்திற்குரிய கடன்கணக்குகளை, அடையாளம் கண்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ‘யெஸ்’ வங்கியின் மூலதன நெருக்கடிக்கு பின்னால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்நிறுவனங்கள் இருப்பது தெரியவந்துள் ளது. அதாவது, நாட்டின் மிகப்பெரிய 10 கார்ப்பரேட் குழுமங்களைச் சேர்ந்த 44 நிறுவனங்கள் ரூ. 34 ஆயிரம் கோடி அளவிற்கு ‘யெஸ்’ வங்கியில் கடன் வைத்துள்ளன. இதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் மட்டும் ரூ. 12 ஆயிரத்து 800 கோடிகடனை செலுத்தாமல் உள்ளன. சுபாஷ் சந்திராவின் ‘எஸ்ஸெல்’ குழுமம் ரூ. 8 ஆயிரத்து 400 கோடி கடன் வைத்துள்ளது.இவை தவிர, திவான் வீட்டுவசதி குழுமத்தின் டிஎச்எப்எல், பிலீப் ரியல்டர்ஸ் நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரத்து 735 கோடியைசெலுத்தவில்லை.

திவாலான ‘இ.எல். அண்ட் எப்.எஸ்.’ நிறுவனம் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி, ‘ஜெட்ஏர்வேஸ்’ ரூ. ஆயிரத்து 100 கோடி, ‘கேர்கர்’ குழுமம் ரூ. ஆயிரம் கோடி, ‘பாரத்இன்ப்ரா’, ‘ரசல் அசாம் டீ’, ‘எவரெடி’, ‘கைதான்’, ‘ஓம்கார்’ குழுமம் ஆகிய நிறுவனங்கள் சுமார் ரூ. ஆயிரத்து 500 கோடி முதல் ரூ. 2 ஆயிரத்து 700 கோடியும், ‘ராடியஸ் டெவலப்பர்ஸ்’ ரூ. ஆயிரத்து 200 கோடி என வாங்கிய கடன் களை திருப்பிச் செலுத்தவில்லை.அதாவது 10 பெருமுதலாளிகள் சேர்ந்து ஒரு வங்கியையே சூறையாடியுள்ளனர்.

;