tamilnadu

சவூதி அரேபியாவுடனான மோதலில் முக்கியமான நகரமொன்றை ஏமன் படைகள் மீட்டெடுத்துள்ளன

சவூதி அரேபியாவுடனான மோதலில் முக்கியமான நகரமொன்றை ஏமன் படைகள் மீட்டெடுத்துள்ளன. வடக்கு மாகாணமான ஹஜ்ஜாவில் உள்ள அல் ஹாதேரா என்ற இடம் தாக்குதல்களைத் தொடுப்பதற்கான இடமாக சவூதி அரேபியாவால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகும். இதை மீட்பதற்காக ஏமன் படைகளும், சவூதி அரேபியாவுக்கு எதிரான குழுக்களும் இணைந்து கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தின. நகரை மீட்டதோடு, சவூதி அரேபியாவின் ராணுவ முகாம் ஒன்றையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

புதிய பனிப்போரைப் பெரிய நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் லூலா டி சில்வா வலியுறுத்தியுள்ளார். இத்தகைய போர்களில் ஈடுபடுவது எந்த நாடாக இருந்தாலும், மனித குலம்தான் அபாயத்தில் தள்ளிவிடப்படுகிறது. பிற நாடுகளின் இறையாண்மையை ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரும் நிறுவனங்கள் மீது வரிகளைக் கூடுதலாக விதிக்க வேண்டும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஷி கசுவோ கோரியுள்ளார். பசுமை முதலீடுகளை அதிகரிக்கவும், தொழிலாளார்களின் ஊதியத்தை உயர்த்தவும் இது உதவும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, ஒரு மணி நேரப்பணிக்கு 1,500 யென் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் ஊதியம் சரிவடைந்துள்ள என்று குறிப்பிட்டார்.