பறவைகள் பூங்கா நுழைவுக் கட்டணத்தை குறைக்கக் கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.28- திருச்சிராப்பள்ளி அய்யாளம்மன் படித்துறை அருகில், பறவைகள் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா நடுத்தர மற்றும் வசதி படைத்த மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணம் பெரியோர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.150 என வசூல் செய்கிறார்கள். இதனை, பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயித்து, அனைத்து மக்களும் பறவைகள் பூங்காவை கண்டு ரசிக்கும் வகையில் நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.