அரியலூர் சிமெண்ட் ஆலைகளின் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
அரியலூர், ஜுன் 3- அரியலூர் மாவட்டத்தில் அதிக சிமெண்ட் ஆலைகள் இருப்பதால் அரியலூர் சிமெண்ட் சிட்டி என்று கூறப்படுகிறது. சிமெண்ட் ஆலைகள் அரியலூருக்கு வந்த பிறகு, பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பொருளாதாரம் சாமானிய ஏழை – எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை. பல கோடி வருவாய் இப்பகுதியிலிருந்து கார்ப்பரேட் சிமெண்ட் ஆலை முதலாளிகளுக்கு கிடைக்கிறது. அவர்கள், லாபம் அடையும் அதே வேளையில் வேலை இல்லாமல் படித்த இளைஞ்சர்கள், வருமானம் இல்லாத குடும்பங்கள், கம்பெனிக்கு அடிமாட்டு விலைக்கு நிலத்தை கொடுத்து விட்டு, வேலை தேடி சென்னை, திருப்பூர், கோவை என பல மாநிலங்களுக்கு, பல நாடுகளுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மே 10 ஆம் தேதி டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவு (மருத்துவ கழிவு) குப்பைகள் பற்றி எரிந்தது. ஏற்கனவே சிமெண்ட் ஆலைகளிலிருந்து வெளிவரும் புகையால் இப்பகுதி மக்கள் வயது வித்தியாசமின்றி மூச்சு திணறல், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆய்வுகளை இந்த மாவட்ட நிர்வாகமோ அல்லது சுகாதரத் துறையோ இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது தான் மர்மமாக உள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட ஆலை நிர்வாகம் எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அமைதியாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, அன்று மாலை பொதுமக்கள், டால்மியா சிமெண்ட் ஆலை முன்பு திரண்டு போராடியுள்ளனர். காவல்துறை பேச்சுவார்த்தை மூலம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என்ற வாய்மொழி உத்தரவை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வலியுறுத்தி இந்திய வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு ஒரு கிராம மக்களுக்கு நீண்ட நாள் கழித்து, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆனால் இன்று வரை மற்ற பகுதி மக்களோடு எந்த விதமான பேச்சுவார்த்தையும், மருத்துவ முகாமும் நடத்திட முன் வரவில்லை. அடுத்து பிர்லா சிமெண்ட் ஆலைக்கு சென்று வந்த லாரி, திடீரென்று புதுப்பாளையம் ரமேஷ் என்பவரின் வீட்டில் மோதி நின்றது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி, குழந்தைகள் மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தனை விபத்து ஏற்பட்ட போதும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது வீதிகளில் இறங்கி போராடியுள்ளனர். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டும், எதற்கும் பதில் இல்லை. பல முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிமெண்ட் ஆலைகளின் அத்துமீறலை கண்டித்து இயக்கங்கள் நடத்தியுள்ளன. பல முறை கொடுத்த மனுக்களுக்கு ஒரு பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. விபத்து நடந்த பிறகு அதைக் கண்டித்து மக்கள் போராடும் போது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது என காவல்துறையும் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது என மாவட்ட நிர்வாகம் இருந்து வருகிறது. அரியலூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை. அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.