காலநிலை மாற்றம் கடல்களை மூச்சுத்திணறச் செய்துகொண்டிருக்கிறது. 2080 ஆகும்போது கடல்சார் சூழலை மோசமாக பாதிக்கும் வகையில் சுமார் 70 விழுக்காடு கடல்கள் ஆக்சிஜன் குறைவால் அழியும் ஆபத்தில் உள்ளன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உலகின் பெரும்பகுதி கடல் மீன்கள் வாழும் நடுத்தர ஆழத்தில் இருக்கும் நீர் இயல்பிற்கு மாறான வேகத்தில் 2021இல் ஆக்சிஜ னை இழந்துவருகிறது என்று இந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை நிலவாழ் உயிரினங்கள் போல நீர்வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதற்குரிய உயிர் வாயு வாக பயன்படுத்துகின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தால் கடல்கள் சூடாவதால் நீரில் உள்ள இந்த வாயுவின் அளவு குறை கிறது. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக கடல்நீரில் குறைந்து வரும் ஆக்சிஜன் குறித்து ஆராய்ந்துவருகின்றனர். ஆனால் இப்புதிய ஆய்வு காலநிலைச்சீரழிவால் நிகழ்ந்துகொண்டி ருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை அவசரமாகத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
எப்போது எவ்வாறு ஆக்சிஜன் குறைகிறது?
இந்த ஆய்வுகள் முதல்முறையாக காலநிலை மாதிரி களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இதன் மூலம் இயற்கை க்கு மாறானவிதத்தில் உலகக் கடல்களில் எப்போது எவ்வாறு நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் நடுத்தர ஆழத்தில் இருக்கும் கடல்நீரில் மீட்கமுடியாதநிலையில் ஆக்சிஜன் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியே பெரும்பாலான கடல்வாழ் மீனினங்கள் வாழும் பகுதி என்பதால் 2021இல் புதிய மீன் குஞ்சுகள் பொரி க்கும் காலத்தில் ஏற்படும் மாற்றம் உலகளாவிய ரீதியில் மீன் வளத்தைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். 2080 ஆகும்போது இந்த ஆக்சிஜன் இழப்பு (deoxygenation) உலகம் முழுவதும் உள்ள கடல்களை மோசமாகப் பாதிக்கும். இதனால் 2080இல் கடல்கள் மீன் வளத்தை இழக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
200 முதல் 1000 மீட்டர் ஆழத்தில்
ஏஜியு புவிசார் இயற்பியல் லெட்டர்ஸ் (A G U Geophysical letters) என்ற ஆய்விதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆக்சிஜனற்ற நிலையால் நிகழக்கூடிய உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. மீசோபிலாஜிக் பகுதி (mesopelagic zone) என்று அழைக்கப்படும் இப்பகுதி கடல் மேல்மட்டத்தில் இருந்து 200 முதல் 1000 மீட்டர் வரை ஆழமுள்ள பகுதி. இப்பகுதியே முத லில் ஆக்சிஜன் இழப்பினால் பாதிக்கப்படும். உலக அளவில் மீசோபிலாஜிக் மண்டலமே வணிகரீதியில் பிடிக்கப்படும் பெரும்பாலான மீன்களின் வாழிடம். இதன் பாதிப்பு வருங்காலத்தில் உலகளாவிய முன்னோடி பொருளாதார மோசநிலை, கடல் உணவு பற்றாக்குறை, சூழல் சீர்கேடு போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். உயரும் வெப்பநிலையால் கடல்நீர் சூடாகிறது. சூடான இந்த நீர் கரைந்த நிலை ஆக்சிஜனை குறைவாகவே தக்கவைத்துக்கொள்கிறது. இது கடல்நீர் அடுக்குகளுக்கு இடையில் குறைவான சுழற்சிகளை ஏற்படுத்துகிறது. இதனால் நடுத்தரப்பகுதி கடல்நீர் அடுக்கு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இது வளிமண்டல ஆக்சிஜனின் செறிவு அதிகம் இல்லாத பகுதி. இங்கு கடலின் மேலடுக்கில் நடப்பது போல ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில்லை. இப்பகுதியிலேயே ஆல்காக்கள் அதிக ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு மக்குகின்றன. மனிதர்களைப் பொறுத்த வரை கடலின் இப்பகுதி மிக முக்கியமானது என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும், ஷாகாய் ஜயோ டாங் (Shanghai Jaio Tong) பல்கலைக்கழக கடலியல் விஞ்ஞானியு மான யுண்டாவ் சௌ (Yuntao Zhou) கூறுகிறார்.
இந்த ஆழத்தில் வாழும் மற்ற உயிரினங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன என்றாலும் கோடிக்கணக்கான மனிதர் களின் அன்றாட முக்கிய உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் வளத்தை இது பெரிதும் பாதிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வு முடிவுகள் கவலை தரும் ஒன்று. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க மனிதன் உடனடியாக செயல்படவேண்டும் என்பதையே இது வலியுறுத்துகிறது என்று என் சி ஏ ஆர் (NCAR) அமைப்பின் கடலியல் நிபுணர் மாத்யூ லாங் (Matthew Long) கூறுகிறார். மனிதன் பூமியின் மிகப்பெரிய சூழல் மண்டலமான கடலின் இயல்பான வளர் சிதை நிலையை (metabolic state) மாற்றுகிறான். இதனால் கடல்வாழ் சூழலிற்கு இன்றும் நாளையும் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை.
பலவீனமாகும் கடல் என்னும் மகாசக்தி
இந்நிலை தொடர்ந்தால் கடல் என்னும் இயற்கையின் மாபெரும் சக்தி பலவீனமடையும் காலம் விரைவில் வரும். இதை மதிப்பிடுவது கூட நாளைய ஆய்வாளர்களுக்கு இயலாத செயலாகிவிடும். தேங்கியிருக்கும், நடுத்தர மற்றும் ஆழ்கடல் நீர்ப்பகுதி ஆகிய மூன்று மண்டலங்களில் ஆக்சிஜன் இழப்பு பற்றி ஆராயப்பட்டது. இந்த மண்டலங்களில் இயல்பாக நிகழும் ஆக்சிஜன் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கும் அப்பால் நடைபெறும் இழப்பு பற்றி ஆய்வாளர்கள் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர். இதன் மூலம் ஆக்சிஜன் இல்லாத நிலை எப்போது ஏற்படக் கூடும் என்பதை ஊகிக்கமுடிந்தது. கடலின் மற்ற பகுதி களைக் காட்டிலும் மீசோபிலாஜிக் மண்டலத்திலேயே பெரும் பரப்பில் அதிக அளவில் ஆக்சிஜன் இழப்பு நிகழ்ந்துவருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியேற்றப்படும் பகுதிகளைக் காட்டிலும் கடலில் குறைவாக உமிழப்படும் பகுதிகளில் ஆக்சிஜன் இழப்பு 20 ஆண்டுகள் தாமதமாகத் தொடங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது கார்பன் டை ஆக்சைடு மற்றும் மற்ற பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைத்தால் கடல்சார் சூழலின் அழிவைத் தடுக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேற்கு, வட பசுபிக் மற்றும் தென் துருவப்பகுதிகளுக்கு அருகில் இருக்கும் கடல்களில் இந்த நிலை மோசமாக இருப்ப தையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வேகமாக உயரும் வெப்பநிலையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆக்சிஜன் குறை பகுதிகள் (Oxygen minimum zones) என்று அழைக்கப்படும் குறைந்த கரைநிலை ஆக்சிஜன் உள்ள வெப்பமண்டலப்பகுதிகளின் பரப்பும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலை உயர்மட்ட பகுதிகளில் (high latitude areas) அதிகமாக நிகழ்கிறது. புவி வெப்ப உயர்வு மீண்டும் பழையநிலைக்கு வந்தாலும் இதன் மூலம் கடல்நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரித்தாலும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த கடற்சூழல் மீண்டும் ஏற்படுமா என்பது கேள்விக்குறியதே. காலநிலை மாற்றத்தைக் குறைக்க மனிதன் உடனடி யாக எதுவும் செய்யாவிட்டால் நாளை மீன் என்ற ஒரு உயிரி னம் கடல்களில் வாழ்ந்தது என்று வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே நம்மால் வாசிக்கமுடியும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்