மதுரை, ஏப்.1- இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க அந்தோலன்கள் (கம்யூனிஸ்ட்டுகள்) அனுமதிக்கமாட்டார்கள் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். கட்சியின் மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது. நாடாளுமன்றத்திற்கு நாட்டின் பிரதமர் மோடி எப்போதாவது வருவார். அவர் வரப்போகிறார் என்றால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று விடுவார்கள். ஆளும் கட்சி எம்.பி.க்கள் எப்போதெல்லாம் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் பிரதமர் வருவார் என்று அர்த்தம். அவர் வந்தவுடன் ஐந்து நிமிடம் வரை கைதட்டிக்கொண்டே நிற்பார்கள். அவர் ஐந்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். ஆனால் அவர் பேசுகிற பொழுது 2,3 முக்கியமான பேச்சுகளில் அவர் அதிகமாக யாரைத் தாக்கிப் பேசினார் என்றால் இடதுசாரிகளைத்தான். 534 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பெரிய பெரிய கட்சி எம்.பிக்கள் எல்லாம் இருக்கிறார்கள். அந்தக் கட்சிகளை எல்லாம் அவர் பேசவில்லை. அவர் கூறும் மிக முக்கியமான வார்த்தை அனைவரும் அறிந்ததே. ஐந்து பேர் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் அந்தோலன் ஜீவிகள் என்றார். அந்தோலன் என்றால் போராட்டம் என்று பொருள். போராடிப் பிழைப்பவர்களே என்று கூவினார். கம்யூனிஸ்ட் எம்.பி.க்களைப் பார்த்து ஆமாம். உங்களைப் போல பிழைக்கவில்லையே. நாங்கள் போராடியதால் தான் நீங்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறீர்கள். நாங்கள் போராடியதால் தான் நாடாளுமன்றக் கட்டடம் இந்தியர்களின் கையில் இருக்கிறது. நாங்கள் போராடியதால் தான் நாட்டின் 135 கோடி மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். மதுரை மாநகரில் அமெரிக்கன் கல்லூரியில் 1945ம் ஆண்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 144 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் அதிக மாணவர்கள் கைது செய்யப்பட்ட மாவட்டம் மதுரை மாவட்டம். அந்த 144 மாணவர்களுக்கும் தலைமை தாங்கிய ஒரு போராட்ட ஜீவி சங்கரய்யா. அந்த அந்தோலன் ஜீவியின் வாரிசுகள் இந்த நாடு முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். இந்த அந்தோலன் ஜீவிகள் இருக்கும் வரை இந்தியாவை கார்ப்பரேட்டுக்களுக்கு விற்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். கனியன் பூங்குன்றன் 2,500 ஆண்டுகளுக்கு முன் சொன்னான், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று. சிறைச்சாலையில் தூக்குக் கயிற்றை தன் கழுத்தில் மாட்டுகிற போது உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று கர்ஜித்து முத்தமிட்டார் தூக்கு மேடைத் தியாகி தோழர் பாலு. கனியன் பூங்குன்றனும், கருவேப்பிலை பாலுவும்இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே கொடியின் கீழ் நிற்பவர்கள். கம்யூனிசம் அழிந்துவிடும் என்று கூறும் கார்ப்பரேட் அடிமைகளுக்கு சொல்கிறோம். பசித்த மனிதன் இருக்கும் வரை, கனவு கானும் இதயம் இருக்கும் வரை, வாழ்க்கையைப் பற்றிய ஆசை இருக்கும் வரை, அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை செங்கொடியைத் தவிர வேறு எதற்கும் வேலை இல்லை. நாங்கள் வெல்வோம்! இவ்வாறு சு. வெங்கடேசன் பேசினார்.