சென்னை, ஏப். 28 - மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி களை ஐஐடி நிர்வாகமும், காவல்துறையும் காப்பாற்றி வருகின்றன. இதனை கண்டித்து வியாழனன்று (ஏப்.28) சென்னை கிண்டி யில் உள்ள ஐஐடியை முற்றுகையிடச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னை ஐஐடி-யில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மாணவி வேதியியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி (பி.எச்டி) செய்து வருகிறார். இதேபிரிவில் பயின்ற மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, பேரா.எடமன பிரசாத் உள்ளிட்ட 8 பேர் அந்த மாணவியிடம் 2017ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மாதர் சங்கத்தின் தலை யீட்டை தொடர்ந்து வழக்கில் 376வது பிரிவு சேர்க்கப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றி பதியப்பட்டது. இவற்றோடு மகளிர் ஆணையமும் தலை யிட்டது.
மேற்கு வங்கத்தில் உள்ள குற்றவாளி முதல்குற்றவாளி முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தகவல் பரப்பினர். இதனைத் தொடர்ந்து மாதர் சங்கத்தின் தொடர் போராட்டத்தையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் குற்றவாளி களாக உள்ள இரண்டு பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதற்கு காவல்துறையும், சிபிசிஐடி-யும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனைக் கண்டித்தும், மாணவியை ஐஐடி-யை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சென்னை மாவட்டக்குழுக்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.
கதையளப்புக்கு கண்டனம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, “இந்த வழக்கில் 2 பேராசிரியர்கள் முன்ஜாமீன் பெற்ற விவகாரத்தில் காவல்துறையும், சிபிசிஐடி-யும் மாறிமாறி கதை சொல்கிறார்கள். 3 குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளனர். உயர் அதிகாரம் கொண்ட குழு (ஹை பவர் கமிட்டி) என்ற ஒன்றை ஐஐடி நிர்வாகம் அமைத்து, அதில், 2 பேராசிரியர்களும் சாதிய, பாலியல் வன்மத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. அதை வைத்து ஜாமீன் பெற்றுள்ளனர். அந்த அறிக்கையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு பதிவாளர் தர மறுக்கிறார். சிபிசிஐடி, ஐஐடி நிர்வாகமும் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன.
பாதிக்கப்பட்ட மாணவி தனது 3வது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை (தீசிஸ்) சமர்ப்பிக்க நிர்வாகம் தடை ஏற்படுத்தி வருகிறது. மாணவியை கல்வி வளாகத்திலிருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஐசிசி குழு, முதற்கட்ட அறிக்கையை கொடுத்தது. அதில் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டு ஆகியும் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காமல் உள்ளனர். இறுதி அறிக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக வரும் என்று சந்தேகிக்கிறோம். ஐஐடி நிர்வாகம் குற்றவாளிகள் 8 பேரையும் பாதுகாக்கும் வகையிலேயே நடந்து கொள்கிறது. மாணவியை வெளியேற்றுவது அல்லது தற்கொலைக்கு தூண்டுவது என்ற வகையில் ஐஐடியின் செயல்பாடு உள்ளது. எனவே, இதனைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தை நாங்கள் நடத்தினோம்” என்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், “குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஐஐடி நிர்வாகமும், காவல்துறையும் நடந்து கொள்கின்றன. ஐஐடி நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து இனி நடைபெறும் போராட்டங்கள் அறிவிக்கப்படாத போராட்டங்களாக இருக்கும்” என்று எச்சரித்தார்.
பேச்சுவார்த்தை
இதனைத்தொடர்ந்து ஐஐடி பதிவாளர் முனைவர் ஜேன்பிரசாத்துடன் முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பி.சுகந்தி, தென்சென்னை மாவட்டச் செய லாளர் ம.சித்ரகலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பதிவாளர், மாணவியின் பி.எச்டி கைடு குற்றவாளியாக இருப்பதால், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் பணிகளை துறைத்தலைவரே மேற்கொள்வார்; மாணவிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொட ரும்; ஐசிசி குழு விசாரணை விரைந்து முடித்து இறுதி அறிக்கை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க மாநில நிர்வாகிகள் எஸ்.கே.பொன்னுத்தாய், ராதிகா, தீஒமு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.