tamilnadu

தமிழக மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக!

சென்னை,பிப்.23- தமிழக மீனவர்களின்  வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் மீன்பிடி  உரிமையை பறிக்கும் சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றும்                 உள்நாட்டு மற்றும் உள்ளூர் மீனவர்களின் மீன் பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,பிப்ரவரி 23 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மீனவர்கள் உள்ளூர் அளவில் குளம், ஏரி, ஆறு, அணைகள் ஆகிய நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து, மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு மற்றும் உள்ளூர் மீனவர்களுக்கு இத்தகைய மீன்பிடி தொழில் ஒன்றே மிகப் பிரதானமான வாழ்வாதாரமாக உள்ளது. இத்தகைய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில் ஏற்கனவே தமிழக அரசால் ஒரு அரசாணை எண். 332/1993 பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த அரசாணையின் படி குளம், ஏரி, ஆறு மற்றும் அணைகளிலிருந்து மீனவர்கள் தங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது 2011 ஆம் ஆண்டில் ஒரு அரசாணை 16/2011 மற்றும் 2014 ஆம் ஆண்டில் ஒரு அரசாணை 72/2014 என இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, பொதுப்பணித் துறையின் மூலமாக மீன்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  தமிழக மீனவர்களின் நலனை முற்றாக பறிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணைகளுக்கு ஈரோடு மாவட்ட மீனவர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டதோடு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை 332/1993 இன் படி உள்ளூர் மீனவர்களுக்கே மீன்பிடி உரிமை வழங்கப்பட வேண்டும் எனும் நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. இத்தகைய நடைமுறையின் மூலம் பல லட்சக்கணக்கான மீனவர்கள் தமிழகத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16.09.2021 அன்று தமிழக மீனவர் நலத்துறையின் சார்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகளில் பிடிக்கும் மீன்களை மீண்டும் பொது ஏலத்தில் விடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீனவர் நலத்துறையின் சார்பில் எடுக்கப்படும் இத்தகைய முயற்சியென்பது லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் ஒன்றாகும். ஏனெனில் பொது ஏலம் எனும் முறை அமலாக்கப்பட்டால் பெரும் நிறுவனங்கள் மற்றும் பெருமுதலாளிகள்தான் இதன் மூலம் பயனடைவார்களே தவிர உள்ளூர் மீனவர்களுக்கு இதனால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை. மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கும் ஆபத்தும் உருவாகி விடும். 

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் உள்நாட்டு மீனவர்களின்   வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, 16.09.2021 அன்று மீனவர் நலத்துறையின் சார்பில்  அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமெனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணை (நிலை) எண் 332/ 1993 ன் வழிகாட்டுதல் படி மீனவர்களின் மீன்பிடி உரிமை மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை எனும் நடைமுறை தொடர்வதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.