tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்....

1931 ஆகஸ்ட் 5 அன்று அலமேலு - பக்கிரிசாமியின் மூன்றாவது குழந்தையாக, காரைக்காலில் பிறந்தவர் தனலஷ்மி.தந்தையை இழந்த  குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. அதனால் மூன்று குழந்தைகளுடன் அலமேலு தன் சகோதரர் வேலை செய்யும் பொன்மலைக்கு வந்தார். அங்கே  மெஸ் ஒன்றை ஆரம்பித்தார்.பள்ளி சென்ற நேரம் தவிர, மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருப்பார் தனலஷ்மி. தொழிலாளர்கள் தனலஷ்மியை ‘பாப்பா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.

ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு, விடுதலைப் போராட்டத்தையும் அறிந்துகொண்டார் பாப்பா.  பாலர் சங்கத்தில் சேர்ந்தார்.  பாலர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்த பாப்பா, எட்டாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறினார். ஆனாலும், சொந்த முயற்சியில் நிறையப் படித்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ‘தொழிலரசு’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.திருச்சிக்கு வரும் பொதுவுடைமை இயக்க தலைவர்கள் பலரால் பாப்பா ஈர்க்கப்பட்டார். அப்படித்தான் கே.பி.ஜானகியம்மாளின் அறிமுகம் கிடைத்தது. ஜானகியம்மாள் பாலர் சங்கத்துக்கு நாட்டுப்பற்று மிக்க பாடல்களை ஊட்டி வளர்த்தார்.1943ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பொன்மலை தொழிலாளர்கள் பங்கேற்ற போது, பாப்பாவும் கோஷங்கள் போட்டார். தானே விருப்பத்துடன் சிறை சென்றார். 12 வயது என்பதால் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது. 1945ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பாப்பாவுக்கு நிறைய தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. கட்சியின் பல நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டார். 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனால், பாப்பாவையும் அவரது அம்மாவையும் (லட்சுமியம்மா என்ற பெயரில்) சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவு வாழ்க்கை தொடங்கியது. அப்போது உமாநாத் அறிமுகம் கிடைத்தது. அம்மா, பாப்பா, உமாநாத் உள்பட பல தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

லட்சுமியம்மா, பாப்பா உள்பட ஏராளமான தோழர்கள் சிறைக்குள்ளே உண்ணாவிரதம் இருந்தனர். 22வது நாள் லட்சுமியம்மாவின் உயிர்பிரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக இருந்தால் மட்டுமே அம்மாவின் உடலைப் பார்க்க அனுமதி என்றது சிறை நிர்வாகம் . அந்த நிபந்தனையை நிராகரித்தார் பாப்பா.1952ல் உமாநாத்தும் பாப்பாவும் திருமணம் செய்துகொண்டனர். தாலியோ, சடங்குகளோ இன்றி புரட்சிகரமாக அவர்களது திருமணம் நடைபெற்றது.         

1970ல் கே.பி.ஜானகியம்மாளும் பாப்பாவும் சேர்ந்து ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவினார்கள். அடுத்த 20 ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்து வழி நடத்தினார் பாப்பா.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக் குழு உறுப்பினர் என  கட்சிப் பணியாற்றினார் பாப்பா உமாநாத்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் சிறப்பாகச் செயலாற்றினார் பாப்பா. 2010 டிசம்பர் 17 அன்று ஓய்வெடுத்துக் கொண்டார்.