சேலம், மே 8- பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனை கண்டித்து அரசு அலுவலகங்கள் முன்பு வரும் மே 9 முதல் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டமும் நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அன்பரசு தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொருளாளர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் மே 9 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து வாகன பிரசாரம் நடைபெறும் என்றார். அதைத் தொடர்ந்து ஜூலை 2 அன்று கோரிக்கை முழக்க கருத்தரங்கங்கள், மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று கூறியதுடன், ஜூலை மூன்றாவது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் லட்சம் பேர் பங்கேற்கும் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.