ஒரு குழந்தை கருவாக உருவான காலம் முதல், இறுதிக் காலம் வரை தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன் / மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட பலரும் அந்தக் குழந்தையின் வளர்ச்சி யில் ஏதோ ஒருவகையில் துணை நிற்கின்றனர். அதேநேரம் அந்த குழந்தை சமூகத்தில் வளர அவர்கள் வசிக்கும் தேசத்தின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் அந்தந்த பகுதிகளை நிர்வகிக்கும் அரசு / அரசு நிர்வாகம் பல வகைகளில் முக்கியமானதாகும். அவர்கள் உடல் நலன் மற்றும் மன நலன் சரியாக இருக்க அந்தந்த பகுதிகளில் அரசாங்கம் செயல்படுத்தும் மருத்துவம் சார்ந்த திட்டங்கள் மிகவும் இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை விடவும் தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பு மக்களுக்கு செய்யும் சேவை மகத்தானது. அந்த மகத்தான சேவையில், உருவான காலம் முதல் இறுதிக் காலம்வரை அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் களப் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் என்றால் அது மிகையாகாது.
இருபத்தி நான்கு மணி நேரமும் ஒவ்வொரு அரசு ஊழியரும் பணி செய்ய கடமைப்பட்ட வர்கள் என்று கூறப்படுகிறது. அது வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கிராம சுகாதார செவிலியர்களுக்கு பொருந்தும். பிரசவம் முதல் திடீரென உடல் நலன் பாதிக்கப் படுவது வரை முதல் தகவலை பெறுபவர்கள் கிராம சுகாதார செவிலியர்களாகவே இருக்கும். காதில் செய்தி விழுந்தவுடன், தனது நிலை, தனது குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட அனைத்தை யும் மறந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனை கொண்டு சேர்க்கும் வரை கிராம சுகாதார செவிலியரின் பணி எந்நேரமும் தேவை யானதாகவே உள்ளது. மழை, வெயில், பகல், இரவு என்று எந்த சூழ்நிலையிலும் தன் பணியை இவர்கள் செய்து வருகின்றனர். அனைத்து நேரத்திலும் பணி செய்வதால் இவர்கள் குடும்ப த்தை, குழந்தைகளை கவனிக்க இயலாத சூழல் ஏற்படுவதும், அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதும் இயற்கையே. இப்படி தொடர்ந்து பணி செய்துவரும் கிராம சுகாதார செவிலியர்கள் சந்திக்கும் இடர்பாடு கள் அதிகம். அரசு கட்டித் தந்துள்ள இவர்களுக்கான அலு வலகத்துடன் ( துணை சுகாதார மையம்) இணைந்த வசிப்பிடம் பெரும்பாலும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் அமையப் பெறுவதில்லை. பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட இல்லாத பகுதியாகவே இருக்கும். இதில் இவர்கள் தமது குடும்பத்தாரு டன் வசிக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்கும். இவர்களின் குழந்தைகள் தரமான கல்வி பெறுவதற்கான வசதி வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். ஊருக்கெல்லாம் அவசர உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவும் இவர்களுக்கு ஓர் அவசரமெனில் உதவி பெறும் வசதி குறைவாகவே இருக்கும்.
களப்பணியின் போது சந்திக்கும் சிக்கல்கள்
தனி நபராக களப்பணியை செய்துவரும் இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விபரம் சேகரிப்பது முதல் அரசு இத்துறையில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பயனாளர்களை அடையாளம் கண்டு தேவையான உதவிகளை செய்தல், தொடர் கண்காணிப்பில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளை செய்து வருகின்றனர். களப்பணியின் பொழுது, பாலியல் சீண்டல் முதல் மிரட்டல்கள் வரை பலவிதமான இடர்பாடுகள் ஏற்படுவது தொடர்கதை. இந்த நேரத்தில் இவர்களுக்கு களப் பணியில் உதவிட, குறைந்தபட்சம் பாதுகாப்பில் உதவிட, உதவியாளர்கள் யாரும் இல்லை. இதனால் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதோடு பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. இவர்களுடைய களப்பணியில் நிறை வேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பெரும்பாலும் ஆன்லைன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. ஆன்லைன் பணியையும் இவர்களே மேற்கொள்ள வேண்டும். இதற்கு வேறு எந்தவித மான பணியாளர்கள் ஏற்பாடும் இல்லை. அதேநேரம் ஆன்லைன் பதிவேற்றம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரண மானதாக உள்ளது. ஒரு பயனாளருக்கு ஆன்லை னில் பதிவேற்றம் செய்யப்படும் பொழுது, சர்வர் பிரச்சனை என்பதால் முழுமையடையாத நிலையில், பயனாளர்களுக்கு அரசினுடைய உதவி கிடைப்பது இல்லாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் இதற்கு கிராம சுகாதார செவிலி யர்கள்தான் காரணம் என்று பயனாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் பிரச்சனை கள் உருவாகின்றன.
இலக்கு நிர்ணயித்து திட்டங்கள் செயல் படுத்தப்படும் போது, மக்களிடையே போதுமான விழிப்புணர்ச்சி குறைவாக இருக்கின்ற கார ணத்தினால், மக்கள் தானாக முன்வந்து பயன் பெறாத சூழல் உள்ளது. சமீபத்தில் கொரோனா விற்கான தடுப்பூசி முகாம்களில் மக்கள் வீடு தேடி சென்றும், பலர் பல்வேறு காரணங்களை கூறி தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுத்தனர். ஆனால் இலக்கை எட்டவில்லை என்பதற்காக, கிராம சுகாதார செவிலியர்கள் உயர் அலு வலர்களிடம் பல்வேறு எச்சரிக்கை மற்றும் குறிப்பாணைகள் பெறும் நிலை ஏற்பட்டது. டாக்டர் முத்து லெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம், பள்ளி சிறார்களுக்கு இரத்தச் சோகை வராமல் இருக்க இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் திட்டம், வளர் இளம்பெண் களுக்கு நாப்கின் மற்றும் இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் திட்டம், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் (ஆண்டிற்கு ஒரு முறை), ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரை, வைட்டமின் ஏ திரவம் அளிப்பது உள்ளிட்ட அவ்வப்போது அரசு அறிவிக்கும் மருத்துவம் சார்ந்த பணிகள், உதாரணமாக பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்ட றிந்து பரிந்துரை செய்தல், தொற்று நோய் ஏற்படக்கூடிய காலங்களில் கிராம சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணிப்பது, 40 வயதிற்கு மேல் உள்ள இருபாலருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் கண்டறிதல் போன்ற வற்றிக்கு பரிசோதனை செய்ய நலக்கல்வி அளித்தல் உள்ளிட்ட அனைத்தையும் கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்கின்றனர்.
சமவேலைக்கு சம ஊதியம்
வெறும் அரசுப் பணி என்று மட்டுமே என்று எண்ணாமல், தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு தன்னால் இயன்ற நல்லதைச் செய்வோம் என்ற எண்ணத்துடன் பெரும்பாலும் கிராம சுகாதார செவிலியர்கள் பணி செய்து வருகின்றனர். அனைத்து அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளோடு, இவர்களுக்கான பிரத்யேகமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளராக பணியில் இணையும் ஒரு ஆண் பெறும் ஊதியம், பதவி உயர்வு வாய்ப்புகள் இதே துறையில் கிராம சுகாதார செவிலியர் களாக பணியில் இணைபவருக்கு கிடைப்ப தில்லை. ஆண், பெண் பேதமின்றி சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், உரிய பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், களப்பணியில் உதவிட உதவி யாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், பதிவேடுகள் அனைத்தையும் அரசே முழுமையாக வழங்க வேண்டும், துணை சுகாதார மையமாகவும் செயல்படும் இவர்களுக்கு குடியிருப்பு இலவச மாக வழங்குவதோடு அதற்குரிய மின் கட்டண மும் அரசே கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் அவற்றை நிறைவேற்றுவார் என்று ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது போல், மக்கள் நல்வாழ்வுத் துறையில் மகத்தான சாத னைகள் செய்துவரும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் அவர்கள் கிராம சுகாதார செவி லியர்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்று வார் என்று எதிர்பார்க்கின்றனர். இந்திய அளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை யில் தமிழ்நாடு அரசு பல்வேறு பரிசுகளை பெறுவதற்கு அடிப்படை காரணமான கிராம சுகாதார செவிலியர்கள் மன நிறைவோடு பணியாற்றும் நிலை உருவாக வேண்டும். நலம் காப்போர் நலன் காக்கப்பட வேண்டும்!