tamilnadu

முன்களப் பணியாளர்கள் விடுமுறை ரத்து உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை

சென்னை, ஜன. 10- முன்களப் பணியாளர்களுக்கு விடுமுறை ரத்து உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல், இவ்வாண்டு மார்ச் இறுதி வரை அதிகரிக்கும் என்பதால், எக்காரணம் கொண்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் விடுமுறை எடுக்க கூடாது என துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்கள். அவசர தேவைக்கு விடுப்பு தேவை என்றால் மருத்துவக் கல்லூரி முதல்வர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், நலப்பணி இணை இயக்குனர் அனுமதி அளித்த பின், ஆட்சியரின் ஒப்புதலில் விடுப்பு அளிக்க வேண்டும் என துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்க்கிறோம். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா பேரிடரில் நாங்கள்  ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், தன்னலமின்றி பணியாற்றி வருகிறோம். கொரோனா முதல் அலையின் போது, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களும் மட்டுமே மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்ததை என்றைக்கும், யாராலும் மறக்க முடியாது. ஏராளமான மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள். கோவிட் வார்டு பணி, குவாரண்டைன் என தொடர்ச்சியாக வாரக் கணக்கில், தங்கள் வீட்டை பிரிந்து, குடும்பத்தினரை பிரிந்து பணி செய்தது துறை செயலாளருக்கு நன்றாகவேத் தெரியும். ஏற்கனவே அந்தந்த துறைகளில் பணிகள் பாதிக்காத வண்ணம், உரிய விடுமுறையை கூட எடுக்க முடியாமல், மருத்துவர்கள் கடமையோடு பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மருத்துவர்கள் அவசர விடுப்பு எடுப்பதாக இருந்தால் கூட, ஆட்சியரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது மருத்துவர்களை வேதனைக்கு உள்ளாக்குவதாக உள்ளது. அதுவும் துறை செயலரின் அறிக்கையில் துணை இயக்குனர், இணை இயக்குனர், மருத்துவக் கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்து, அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அனுமதி தேவை என்பது ஒரு ஜனநாயக நாட்டில் எங்கும் இல்லை. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். துறை செயலாளர் என்ற வகையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு, அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தையும், அரசு வேலையையும்  தருவதற்கு கூட இதுவரை அக்கறை காட்டவில்லை. மேலும் மருத்துவர்களின் உழைப்பை பயன்படுத்திக் கொள்ளும் துறை செயலாளர், கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணை 354இன் படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திடவும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவர்கள் அதுவும் அவசர விடுப்பு எடுப்பதற்கு கூட கெடுபிடிகள் விதித்துள்ளது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அந்த உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.