ஐக்கிய விவசாயிகள் முன்னணி- தொழிற்சங்கங்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப். 22- ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமுமின்றி - தொழிலாளர் நலச் சட்டத்திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாளை முன்னிட்டு, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள் அன்று நாடு தழுவிய கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பை திரும்பபெற வலியுறுத்தி கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி, தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் தொ.மு.ச ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏ.ஐ.டியு.சி நடராஜா, ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், எல்.எல்.எப் தெய்வீகன், யுடியுசி சிவசெல்வன் ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் கே.ராஜன், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், யுடியுசி மாவட்டச் செயலாளர் ராஜாராம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சோ.பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.