tamilnadu

மக்களின் நடைமுறை வாழ்க்கையை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணரவில்லை

மக்களின் நடைமுறை வாழ்க்கையை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணரவில்லை

புதுக்கோட்டை, மே 31-  மக்களின் நடைமுறை வாழ்க்கையை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணரவில்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் (காங்கிரஸ்) கார்த்தி ப.சிதம்பரம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.  அவர் அளித்த பேட்டியில், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் நிதியை ஒன்றிய அரசு குறைத்திருக்கிறது. இந்நிலையில் பதிவு செய்தவர்களுக்கு 100 நாட்கள் வேலை தர முடியுமா?, ஒரு குடும்பத்துக்கே கூட 100 நாள் வேலை தர முடியுமா? எனத் தெரியவில்லை. நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருப்பது அபத்தமானவை. ஓராண்டில் நகையை முழுத் தொகையையும் செலுத்தி மீட்க வேண்டும் என்றால், அவர்கள் ஏதாவது தனியார் வட்டிக் கடைக்குச் சென்று பணத்தை வாங்கித்தான் வருவார்கள்.  அதேபோல, நகையை வைக்கச் செல்லும்போது, அந்த நகைக்கான ஆதாரத்தைக் கேட்பது, ரசீது கேட்பது அபத்தம். மக்களின் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால்தான் இதுபோன்ற விதிமுறைகளைக் கொண்டு வர முடிகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு எடுத்துச் சொல்வோம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. வடமாநிலங்களில் அப்படி இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மீது மக்களிடம் எந்த மாறுபாடும் இல்லை. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என மக்கள் கருதவில்லை. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவினர், சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என உணர்ந்து கூட்டணியை முறித்தார்கள்.  ஒரே ஆண்டில் மீண்டும் கூட்டணி அறிவித்திருக்கிறார்கள். அதற்குள் என்ன மாற்றம்  உண்டாகியிருக்கிறது. அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் இந்தக் கூட்டணியை ஏற்கவில்லை என்றார்.