tamilnadu

img

லாரித் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ‘‘சேங்கை” - சைதை ஜெ.

முனகிக்கொண்டும் சீறிக்கொண்டும் தட தடத்துக் கொண்டும் லாரிகள், நம் கண் களுக்கு இரவுப்பகலென எப்போதும் காணக்கிடைக் கின்றன. அவைப் பயணிக்காத சாலைகளே இல்லை எனலாம். உயிர்வாழ அவசியமான உணவுப் பொருட்கள் முதல் உற்பத்திக்குப் பயன்படும் இயந்தி ரங்கள் வரை அனைத்துப் பொருட்களையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு லாரி களே ஏற்றிச் செல்கின்றன. சந்தை விநியோகத் தின் உதிரத் தடங்கள் அவை.  பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சாலைவரி கள், சுங்கச்சாவடிக் ( டோல்)  கட்டணம், செக் போஸ்ட் - போக்குவரத்துப் போலீஸ் மாமூல், விபத்துக் களால் ஏற்படும் இழப்புகள், களவு, தொழில் போட்டி என இத்துறை சமாளிக்க வேண்டியவைஏராளம்.  நாடு முழுவதும் சங்கிலித்தொடர் போல பின்னிக்கிடக்கும் இத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் நிர்வாகிகள் வரை அணி திரட்டப்படாத உதிரித் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவனின்றி அணுவும் அசையாது என்பது உண்மையோ இல்லையோ லாரித் தொழில் ஊழியர்கள் இன்றி எந்தப் பொருளும் அசையாது.  ஆனால் அவர்களது உழைப்பின் அவசியத் தேவை யோ, சமூக மதிப்போ யாராலும் கொண்டாடப் பட்டதில்லை. உணரப்பட்டதே கூட இல்லை. ஏன்?  ஏனெனில் முற்றிலும் அது வியர்வைச் சார்ந்தத் தொழில். குறைந்த எழுத்தறிவும் உடலுழைப்பும் பட்டறிவுமே போதுமானது. அதில் புழங்கு பவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு வாசிகள். அதனால்தான் சமூகத்தின் பிறப்பகுதியினர் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. 

கனரகப் போக்குவரத்து லாரித் தொழில் குறித்த தமிழ் இலக்கியப் பதிவாக கவிப்பித்தன், ‘சேங்கை’ புதினத்தைப் படைத்தளித்திருக்கிறார். 2023 ஜனவரியில் சென்னை புத்தகக் காட்சியின் போது வெளிவந்திருக்கிறது.  சேங்கை என்றால் பாழடைந்த நீர்நிலை  எனச் சங்க இலக்கியம் பொருள் சொல்கிறது. லாரித் தொழில் உழைப்பாளிகளும் பாழடிக்கப்பட்ட நீர் நிலைக்கு ஒப்பானவர்கள்தாம். எனவே சேங்கை எனப் பெயரிட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.  கண்புருவத்து மேடெனத் தெரியும் சென்னை  ராயபுரம் பாலத்திற்கு அருகிலுள்ள மாடிப்பூங்கா வின் எதிரில் மஞ்சள் வண்ணக் கட்டிடத்தின் இரண்டாவது மாடி வராந்தாவில் தொடங்குகிறது நாவல். பத்துக்குப் பத்து பரப்பளவு கொண்ட அறை.  வாழ்க்கையைத் தேடி சென்னை மாநகருக்குள் வந்து குமிகிற எளியக் குடும்பத்து இளம் பேச்சிலர் வசிப்பிடத்தின் குறியீடு அந்த அறை.  லோடிங் கிளார்க்குகள் மணி, சுந்தர் மேலாளர் மாதவன் ஆகியோரின் பேச்சொலிகளாலும் மூச்சுக்காற்றுகளாலும் நிறைந்திருக்கும் இந்த அறையிலிருந்தே - நாவலின் நிகழ்வுகள் அனைத்தும்  புறப்படுகின்றன அல்லது இந்த அறைக்குள் வந்து சேர்ந்துவிடுகின்றன.  நாவலின் கதையை நான் கூறப்போ வதில்லை.  பதத்திற்கு சிலத் துளிகளை ஏந்தித் தருகிறேன்.  தொழிற்சாலைக்குள் நடந்த விபத்தொன்றை  நெடுஞ்சாலையில் நடந்ததாக உருமாற்று கிறார்கள். எளிய மனிதரின் மரணம் இழிவுபடுத்தப் படும் காட்சி அது. பணத்தின் செல்வாக்கு நம்மை  பயமுறுத்துகிறது.  காதலை வெளிப்படுத்தவிடாமல் சம்சாரியை அழுத்தும் வறுமை. காதலை ஏற்க இடம்தராமல் ஒடுக்கப்பட்டவரை அழுத்தும் சாதி இழிவு. ஆற்றுப்படுத்திவிடலாம் வறுமையின் வலியை. உள்ளுக்குள் புரையோடிப்போய் பிறரால் உணர முடியாதபடி மூடியிருக்கும் ரணம் சாதி இழிவின் வலி. இரண்டு வலியும் ஒன்றா..! சமநிலைப்படுத்த முடியுமா...? குத்தீட்டிபோல் துளைக்கும் கூர்மையானக் கேள்விகள்.  லாரித்தொழில் உலகின் களநிலவரம் உள்ளது உள்ள  படியே இலக்கிய மாக்கப்பட்டிருக் கிறது. மிகைப் படுத்தியோ குறைப் படுத்தியோ உண்மைத்தன்மை சிதைந்து விடாதபடி.  மண்ணிலிருந்து கொப்பளித்துக் குதித் தோடும் ஊற்று நீர் போல எளிய சொற்கள். குடியாத்தம் - ராணிப்பேட்டை - வேலூர் வட்டாரத்து தனித்தத் தமிழ். லாரித் தொழிலுக்கே உரித்த குறியீட்டு வார்த்தைகள். உச்சரிப்புகள். நிறைச்சுமை ஏற்றி முதல் கியரில் அசைந்தாடி பயணத்தைத் துவக்கும் போது குபுகுபுவென வெளியேற்றும் அடர் கரும்புகை. தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் குளிக்காமல், எஞ்சின் சூட்டிலும் இயற்கையின் சூட்டிலும் வெம்பி வெளி வரும் மனித வியர்வையின் மணம். முற்றிலும் ஓர் புதிய உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் கவிப்பித்தன். நேர்த்தியாக வடி வமைத்து வாசிக்கத் தூண்டும் அழகில்  வழங்கி யிருக்கிறார்கள் நீலம் பதிப்பகத்தார். தமிழ் இலக்கிய உலகும் உழைக்கும் மக்களும் வரவேற்க வேண்டிய நல்வரவு  சேங்கை. 

சேங்கை ( நாவல்) 
ஆசிரியர் : கவிப்பித்தன்
வெளியீடு : நீலம் பப்ளிகேஷன்ஸ் 
பக்கம் : 320
விலை : ரு. 350/-