திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் வேதா என்ற தனியார் நிறுவனம், தீபாவளி போனஸ் வழங்க மறுப்பதைக் கண்டித்து, 1,700 தூய்மைப் பணியாளர்கள், 300 குப்பை வாகன ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக போராடி வருகின்றனர். அதனொரு பகுதியாக புதனன்றும் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா, மாவட்டச் செயலாளர் மாறன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.