tamilnadu

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர்

சென்னை, டிச. 29 -  போக்குவரத்து ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 29 புதன்கிழமையன்று  சென்னையில் தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்களுக்கான 13 ஆவது ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதன்பின் 14ஆவது ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையை அதிமுக அரசு தொடங்க வில்லை. கொரோனா பரவலை தடுக்க  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பேச்சு வார்த்தை மேலும் தள்ளிப்போனது. இதன்பின் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தின. இதனையடுத்து கடந்த ஜனவரி 5, பிப்ரவரி 18 தேதிகளில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முன்னேற்றம் இல்லாததால் பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் அரசு ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கியது.

இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது. போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செப்டம்பர் 1 அன்று கூட்டமைப்பு தொழிற்சங்கங்களை அழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். ஆனாலும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் அரசு காலதாமதம் செய்து வந்தது‌.  இதனையடுத்து பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி சிஐடியு அக்டோபர் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் முழக்க போராட்டமும், நவம்பர் 22, 23 ஆகியதேதிகளில் உண்ணாநிலை போராட்டமும் நடைபெற்றது. இதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக 14ஆவது ஒப்பந்தத்திற்கான 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை  குரோம்பேட்டை யில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் டிசம்பர் 29 புதனன்று தொடங்கியது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிற்சங்க தரப்பில் சண்முகம், கி.நடராஜன் (எல்பிஎப்), அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார் (சிஐடியு) உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. இவற்றில் சாத்திய மானதை முதலமைச்சருடன் கலந்து பேசி  நிறைவேற்றப்படும். அடுத்த கட்ட  பேச்சுவார்த்தை தேதியை நிர்ணயிக்க வில்லை. ஆனால் விரைவில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றார். தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச தலைவர் சண்முகம் கூறியதாவது:   கடந்த 10 ஆண்டுகாலமாக தனியாருக்கு கொடுக்கப்பட்ட வழித்தடங்களை மீட்க வேண்டும், தனியாருக்கு சாதகமாக கடந்த ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கால அட்டவணையை மாற்ற வேண்டும், 300 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

மகளிர் கட்டணமில்லா பயணத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பேட்டா இழப்பை ஈடு செய்யவும், இதர படிகளை  உயர்த்தி வழங்கவும் அமைச்சர் ஒப்புக்கொண்டார். பேருந்துகளுக்கான ஊதிய விகிதம் 7.5 என்ற அளவை கொண்டு  வரவும், கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட  தண்டனைகளை ரத்து செய்து, பணி மூப்பு வழங்கி, பதவி உயர்வு வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஒப்பந்தத்தில் இருந்ததற்கு மாறாக திருத்தப்பட்டதை சரி செய்யவும் ஒப்புக்கொண்ட அமைச்சர், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் இடைக்கால நிவார ணம் பெற்று வருகிறோம். பே-மேட்ரிக்ஸ் கொண்டு வரவும் அமைச்சர் ஒப்புக்கொண்டுள் ளார். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு வழங்குவதை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்ட அமைச்சர், முத லமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அநேகமாக அடுத்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.