வுஜோ, (சீனா), மார்ச் 22 - சீனாவின் ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் 737’ விமானம், திங்களன்று 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்றது. இந்த விமானம் வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைப் பகுதியில் பிற்பகல் 2:38 மணியளவில் பறந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், காவல்துறையினர் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் தொடர்ந்தது. இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடைந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை அதிகாரிகள் சேகரித்தனர். ஆனால், அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போதுவரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் இந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.