tamilnadu

img

புதுக்கோட்டையில் தொல்லியல் வட்டம் உருவாக்க வேண்டும் தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தொல்லியல் வட்டம் உருவாக்க வேண்டும்
தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப். 29-  தொல்லியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் புதுக்கோட்டையை மையமாக வைத்து, தொல்லியல் வட்டம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 14 ஆவது மாநாடு, புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரமா.ராமநாதன், சு. மதியழகன், ரெ. வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.  மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலத் துணைச் செயலாளர் ஸ்ரீரசா பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், பொருளாளர் மு.கீதா, எஸ். இளங்கோ ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் மாவட்டத் தலைவராக ராசி.பன்னீர்செல்வன், செயலாளராக ரெ. வெள்ளைச்சாமி, பொருளாளராக மு. கீதா, துணைத் தலைவர்களாக  எஸ்.இளங்கோ, சு.கவிபாலா, உஷா நந்தினி, துணைச் செயலாளர்களாக நேசன் மகதி, வடகாடு ராஜா, மைதிலி கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட 37 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், “பெண் எழுத்து, சமகால இலக்கியம்’’ என்ற தலைப்பில் ஆர்.நீலா, “கீழடி ஆய்வறிக்கை- மறுப்பின் அரசியல்’’ என்ற தலைப்பில் கவிஞர் ஜீவி ஆகியோர் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன் நிறைவுரையாற்றினார். மாலையில் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு ராசி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். “இந்திய அரசியல் சாசனம் 75’’ என்ற தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றினார்.  சாதனை மாணவர்களைப் பாராட்டியும், சங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய முன்னோடிகளைப் பாராட்டியும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னதுரை சிறப்புரையாற்றினார். முன்னதாக எம்.ஸ்டாலின் சரவணன் வரவேற்க, மு.கீதா நன்றி கூறினார். தீர்மானங்கள் 1899 இல் கட்டப்பட்ட புதுக்கோட்டை நகர்மன்றக் கட்டடத்தை, அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். ஆலங்குடி வட்டாரப் பகுதிகளில் விளையும் மா, பலா, வாழையைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.  பலாவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வசதியுடன் கூடிய நூலகம், ஓய்வறைகள் அமைக்க வேண்டும். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயரைப் போற்றும் வகையில் ஆலங்குடியின் ஏதேனும் ஒரு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும். ஆலங்குடி பொது  நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். சாதிகளின் பெயரில் திருமணத் தகவல் மையம் நடத்துவதைத் தடை செய்ய வேண்டும்.  தொல்லியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் புதுக்கோட்டையை மையமாக வைத்து தொல்லியல் வட்டம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.