கோடை கால நெரிசலைத் தவிர்க்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, மார்ச் 30- கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், ஆறு ஜோடி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் ஏசி இல்லாத படுக்கை வசதி, ஏசி மூன்று அடுக்கு படுக்கை வசதி மற்றும் அமரும் வசதி கொண்ட பெட்டி கள் கூடுதலாகச் சேர்க்கப்பட உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ஏசி வாரமிருமுறை விரைவு ரயிலில் சென்னை யில் இருந்து மார்ச் 31 முதல் மே 5 வரையிலும், மறுமார்க்கத்தில் ஏப்ரல் 1 முதல் மே 6 வரையிலும் இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும். இதே போல், ராமேஸ்வரம் - மங்களூரு சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயிலில் ராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 5 முதல் மே 3 வரையிலும், மங்களூருவிலிருந்து ஏப்ரல் 4 முதல் மே 2 வரையிலும் இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் கூடுதலாகச் சேர்க்கப்படும். சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி விரைவு ரயிலில் மார்ச் 30 முதல் ஜூன் 2 வரை இரு மார்க்கங்களிலும் ஒரு கூடுதல் அமரும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - சார்லப்பள்ளி அதி விரைவு ரயில்களில் குறிப்பிட்ட தேதிகளில் தலா ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி இடையே ஏப்ரல் முதல் ஜூன் வரை இரு மார்க்கங்களிலும் தலா 10 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்பு ரயிலில் ஏசி இரண்டு அடுக்கு, ஏசி மூன்று அடுக்கு, படுக்கை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
