tamilnadu

img

மதுரைக்கான மூன்று மகிழ்ச்சியான செய்திகள் - சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரையின் நீண்டகால கோரிக்கைகளாக இருந்த 3 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு;

தமிழர் திருநாளை உற்சாகத்தோடு உணர்வு மேலோங்கிடக் கொண்டாடி முடித்திருக்கிற இவ்வேளையில் மதுரை மக்களுக்கான மூன்று கோரிக்கைகள் இந்த புத்தாண்டில் நிறைவேறியுள்ளன என்ற மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

1) 24 மணி நேரமும் இயங்கும் விமானநிலையம்

தென்மாவட்டங்களின் வணிகம், சுற்றுலா ஆகியவற்றின் வளர்ச்சிக்காக மதுரை விமான நிலையத்தினை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வந்தோம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அதனை வலியுறுத்திப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். ஒன்றிய அமைச்சர்களை நேரடியாகச் சந்தித்து இடைவிடாத முயற்சிகளைச் செய்து வந்தோம்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்கோரிக்கைக்கு இணைந்து குரல் கொடுத்தனர்.

கடைசியாக நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் இப்பிரச்சனையை நான் எழுப்பினேன். அதற்குத் தலைகீழான பதிலை அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் விடாது போராடினோம்.

இப்பெரும் போராட்டத்தின் விளைவாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கத் தேவையான தொழில் பாதுகாப்புப்படை வீரர்களை வழங்கவுள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

 

2) மதுரை - போடி அகல ரயில் பாதை

மதுரை முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை திட்டம் கடந்த  10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, ரயில்களை இயக்கக்கோரி தொடர்ந்த முயற்சிகளைச் செய்தோம்.

ரயில்வே உயர் அதிகாரிகளையும் ஒன்றிய ரயில்வே அமைச்சரையும் பலமுறை நேரில் சந்தித்து  வலியுறுத்தினோம். அதன்படி கடந்த ஆண்டு மதுரை - தேனி வரை திட்டம் செயல்படத் தொடங்கியது.

தேனிக்கும்  போடிநாயக்கனூருக்கும் இடையே தண்டவாளப் பணிகள் முடிந்து பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடிந்து 2-1-2023 ஆம் நாள் சான்றிதழ் வழங்கப்பட்டது. 85 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் ஓடலாம் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை போடிநாயக்கனூர் பிரிவில் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டுமென இரு வாரங்களுக்கு முன் மதுரை வந்த நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவில் வலியுறுத்தினேன்.

தற்போது போடி வரை ரயிலை நீட்டிப்பதற்கான பணிகள் நிறைவுற்று அதன் வேகத்தை அதிகரித்து போடி வரை இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து போடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாக விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நமது தொடர்ச்சியான தலையீட்டின் காரணமாக போடி முதல் சென்னை வரை மதுரை வழியாக விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

 

3) மூன்றாவது கேந்திர வித்யாலயா பள்ளிகான நிதி ஒதுக்கீடு.

நாடாளுமன்றத்தின் கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் மதுரைக்கு 3ஆவது கேந்திர வித்யாலயா பள்ளி தேவை என்கிற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடையபட்டியில் மூன்றாவது பள்ளி அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. 

பள்ளியின் கட்டுமானப்பணிகளுக்காக இருபது கோடி அறிவிக்கப்பட்டு அவற்றின் முதல் பகுதியாக ஐந்து கோடியே இருபது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்வான செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வகையில் மதுரையின் நீண்டகால கோரிக்கைகளாக இருந்த 3 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.