தேனி, நவ.25- தசைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவனுக்கு மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். தேனி மாவட்டம் புதுப்புரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முனியாண்டி -மாலதி தம்பதியினர். இவர்களது ஏழு வயது மகன் தீபக் மூன்று மாதங்களுக்கு முன்பு இரு கை, கால்கள் செயலிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி, தனது மகனை தேனி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சேர்த்தார். உடனடியாக பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் பரிசோதனை முடிவில் தீபக்கிற்கு அரிதாக வரக்கூடிய குழந்தைகளை தாக்கும் குல்லியன் பாரி சின்ரோம் என்ற தசைகளை பலமிழக்க செய்யும் நோய் தாக்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ராவின் வழிகாட்டுதலில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மருத்துவர்கள் ரகுபதி, இளங்கோவன், கிருத்திகா மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன், வேல்மணி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் தீபக்கை உள் நோயாளியாக அனுமதித்து 111 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். கைகள் மற்றும் கால்கள் செயலிழந்து மூச்சு விடவே தீபக் சிரமப்பட்டதால், அவரை வெண்டிலேட்டர் மூலமாக 45 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு சேர்ந்த முதல் நாளே நரம்புகளை தாக்கும் விளைவை குறைக்க விலை உயர்ந்த இன்ட்ரவனஸ் இம்யூனோகளோபுலின் மருந்தை அளித்து சிகிச்சை அளித்தனர். மேலும் சுவாசத் தொற்று ஏற்படாமல் தவிர்க்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர குழந்தைக்கு தேவையான உணவை மூக்கு வழியாக வயிற்றுக்கு அளிக்கப்பட்டதோடு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 111 நாட்கள் 24 மணி நேரம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தீபத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாச கருவியில் இருந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டு சுவாசக்குழாய் வழி துவாரம் போடப்பட்டு தொடர் சிகிச்சை அளித்த பின்பு தீபக் இயல்பாக மூச்சுவிட ஆரம்பித்து தற்போது உடல்நலம் தேறி முழுகுணம் அடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தீபக்கின் பெற்றோர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறைக்கு வந்து முதல்வருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் இந்த குழந்தைகளை தாக்கும் அரியவகை நோய் சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும் நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 111 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 24 மணி நேரமும் போராடி குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட ஏழாவது குழந்தை தீபக் என்பதும் குறிப்பிடத்தக்கது.