tamilnadu

வாக்காளர்களை விலைபேசும் ஆளுங்கட்சி

மதுரை, ஏப்.13-மதுரை தொகுதியில் அடுத்தடுத்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் தூங்கி வழியும்நிலையில் ஆளுங்கட்சியினர் பகிரங்கமாக வாக்காளர்களை விலைபேசி வருகின்றனர்.இந்த நிலையில் பணப்பட்டுவாடா நடப்பதை கையும் களவுமாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடித்துக்கொடுத்தும் தேர்தல் அதிகாரிகளோ, காவல்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்யும் சம்பவங்களும் தொடர்கின்றன.அதிமுக சார்பில் தனது மகன் ராஜ் சத்யனை வேட்பாளராக நிறுத்தியுள்ள சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, வாக்காளர்களை விலை பேசும் விதத்தில் பணப் பட்டுவாடாவை பகிரங்கமாகத் தொடங்கிவிட்டார். இதை மதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலேஅதிமுக கூட்டணியின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து புகார்கள்அளிக்கப்பட்டுள்ளன. மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் வலியுறுத்தியும் கூட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


குறிப்பாக வாக்காளர்களை விலைபேசும்அதிமுகவினரின் பணப் பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள்அளித்தும் நடவடிக்கை இல்லை. க.கனகராஜ் மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டும் கூட எந்த அசைவும்இல்லை. மறுபுறத்தில் ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி நடக்கிறது. காவல்துறை அதற்கு துணைபோகிறது. இந்த நிலையில் மதுரை அண்ணாத் தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக-வைச்சேர்ந்த பத்மநாபன் என்பவரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடித்து திலகர்திடல் காவல்நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனர். இது தொடர்பாகபுகாரும் அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலுடன் கையில் ரொக்கப்பணத்தை வைத்துக் கொண்டு பெயர் வாரியாக மேற்படி நபர் பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தார் என்பதையும் அதைநேரில் பார்த்து கையும் களவுமாக பிடித்தோம் என்பதையும் புகாரில் குறிப் பிட்டுள்ளனர். எனினும் கண்துடைப்பாக வழக்குப் போடுவதுபோல் போட்டு, நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றநிலையே இருக்கிறது.


கண்துடைப்பாக மற்றுமொரு சோதனை


இதற்கிடையில் மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கான்கிரீட் தொழிற்சாலையிலிருந்து வாக்காளர்களுக்கான பணம்கொண்டு செல்லப்படுவதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகவல் கிடைத் தது.இதை கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் மாநிலத்தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரி,மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்,காவல்துறை ஆணையர் உள்ளிட்டவர் களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.இதையடுத்து பறக்கும்படை அதிகாரிநாகரத்தினம், காவல்துறை உதவிஆணையர் உதயகுமார் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தினர். சுமார் 30 நிமிடம்சோதனை நடத்தி விட்டு ‘‘ஒன்றுமில்லை’’ 500 டிபன் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளது. அதற்கும் பில் வைத்துள்ளனர் என மிகச் சாதாரணமாகக் கூறி ஆய்வை முடித்துக் கொண்டனர்.தகவலறிந்து வருமான வரித் துறையினரும் அந்த நிறுவனத்திற்கு வந்தனர்.சோதனையின் போது செய்தியாளர் களை அனுமதித்த காவல்துறையினர் வருமான வரித் துறை சோதனை நடைபெற்ற போது, செய்தியாளர்கள் உள்ளே வரக்கூடாது எனத் தடுத்துவிட்டனர். அவர்களும் 30 நிமிடத்தை அந்த நிறுவனத்தில் செலவழித்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர்.இந்த நிறுவனத்தில் இதுவரை இரண்டு முறை சோதனை நடைபெற்றுள்ளதாக பறக்கும்படை அதிகாரியொருவரும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் இது நான்காவது சோதனையென்றும் கூறினர். இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவலே உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. வெறும் மேலாட்டமாக நடைபெற்றுள்ள விசாரணை, சோதனையால் எந்தப் பலனுமில்லை. நெருப்பில்லாமலா புகையும். சனிக்கிழமை நடத்திய சோதனை போல் தேர்தல் முடியும் வரை நடத்தினாலும் அதிகாரிகள் கடைசி வரை டிபன் பாக்ஸ்தான் உள்ளது என்பார்கள். தேவைதீவிர சோதனை மட்டுமல்ல கண்காணிப் பும் தான்’’ என்றார்.




;