பி ராகவன் நகர்(கொச்சி), மார்ச் 4- சிபிஎம் கேரள மாநில மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வளர்ச்சிக் கொள்கையானது 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைத் தரத்திற்கு கேரளாவை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: முதல்வரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் தாக்கல் செய்த கொள்கை அறிக்கை, கல்வி, பாரம்பரிய தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்து, புதிய கேரளாவை உருவாக்க முன்மொழிகிறது. வளர்ச்சிக்கான ஆவணம் நான்கு பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. அரசாங்கங்களில் கட்சி தலையீட்டிற்கு வழிவகை செய்யப்படும். 2016 ஆம் ஆண்டு எல்டிஎப் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட நிலைமையை இரண்டாம் பகுதி விவரிக்கிறது. கேரளாவின் பொது வளர்ச்சி, அடித்தட்டு மக்களின் நலனில் எவ்வாறு முன்னேறியது என்பதையும் இது விளக்குகிறது. மூன்றாவது பகுதி புதிய கேரளாவை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள். அடுத்த 25 ஆண்டுகளில், கேரளாவின் வாழ்க்கைத் தரம் சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளின் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல சிறப்புத் தலையீடுகள் தேவை.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து நியாயமான முறையில் விநியோகிக்க வேண்டும். அதற்கு புதிய இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் திறமையான தொழிலாளர்களின் பயன்பாடு தேவைப்படுகிறது. நலத்திட்டங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட வேண்டும். அத்தகைய வளர்ச்சி தொடர, அறிவில் ஒரு பாய்ச்சலாக இருக்க வேண்டும். இதற்கு உயர்கல்வித்துறையை வலுப்படுத்த வேண்டும். அறிவியலும் தொழில்நுட்பமும் அனைத்து மக்களும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகக் கல்வியானது உற்பத்தித் துறைகளுடன் இணைக்கப்பட வேண்டும். மக்களின் சமூக உணர்வு, வரலாற்று உணர்வு மற்றும் மனித விழுமியங்கள் மேலும் வளர வேண்டும். எதிர்கால கேரளா சமூக அறிவியல் ஆய்வுகள், அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்மொழியின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாரம்பரிய தொழில்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். இது குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சிக்கு தேவையான முழுமையான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கொள்கை கூறுகிறது. மேலும், பல்வேறு துறைகளில் வல்லுநர்களுடன் இந்தக் கொள்கை விவாதிக்கப்படும் என்றும், அரசாங்கத்திற்கான செயல் திட்டங்களை எல்டிஎப் வகுக்கும் என்றும் கொடியேரி கூறினார். செய்தியாளர் சந்திப்பில் வரவேற்புக் குழுத் தலைவர் பி.ராஜீவ், பொது ஒருங்கிணைப்பாளர் சி.என்.மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.