சென்னை, பிப். 28- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ரயிகளில் இணைக்கப்படும் என்று ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார். ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு பெட்டிகளை உடனடியாக திறந்து விடக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய கோட்டங்களில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தை மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து சகஜ நிலை திரும்பிய பிறகும், ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிப்பதை தடுக்கும் வகையில் சலுகை கட்டணம், சிறப்பு பெட்டி அனுமதியை மறுத்து வருகிறது. இதற்கு காரணம் என்ன? அரசாணை ஏதாவது உள்ளதா என்பதை தெளிவுபடுத்தவில்லை. சட்டப்படி போராடி பெற்ற உரிமைகளை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பறித்துள்ளது.
மேலும், ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் வண்டிகளை நிறுத்த சிறப்பு வசதியில்லை. நடைமேடை பேட்டரி வண்டிகளில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு கவுண்டர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பயணச்சீட்டுகள் வழங்கவும் மறுப்பதை கண்டித்தும் சிறப்பு பெட்டிகளைத் திறந்து, சலுகை கட்டணத்துடன் மாற்றுத்திறனாளிகளை மட்டும் பயணிக்க அனுமதிக்க வேண்டியும் இந்த பேராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர்கள் பா.ஜான்சிராணி, எஸ்.நம்புராஜன், பாரதி அண்ணா, மாரியப்பன், சங்கர் ஆகியோர் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்லையாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முன்பதிவு செய்யப்படாத கவுண்டர்கள் ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என்றும், சிறப்பு பெட்டிகள் திறந்து சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த தகவலை போராட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் தலைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.