மணிப்பூர் மாநிலம் சாவின் - கைகளில் நொறுங்கிக் கொண்டிருக்கிறது தீயின் நாக்கு, பார்த்துப் பார்த்துப் பழங்குடி மக்கள் குடிசைகளாய் நுழைகிறது பிறந்த குழந்தைகள் கன்னம், வருடக் கதவு திறந்த நாள்கள் இப்போது இல்லை. பிணங்களை எண்ணிச்சொல்லத் துப்பாக்கித்தோட்டாக்களுக்கும் நேரம் இல்லை. குக்கிப்பழங்குடி இன மக்களை வார்த்தைகள் உருவப்பட்ட கவிதைகளால், வாழ்க்கையைஒளிப்படுத்தவந்த நம்பிக்கைகளால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் வசம் இருந்த உரிமைகளை மெய்தி இனத்தவர்க்கும் பந்தி வைத்துப் பரிமாறியது அரசாங்கம் இனக் கலவரம் இனமோதலாகி, போராட்டமாகித் தெருக்கள் வீடுகள், கடைகள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோரையும் அவர்கள் தூக்கங்கள் விழிப்புகள் கனவுகள் ஆசைகள் எல்லாவற்றையும் சூறையாடின. எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், இந்திய அரசியல் சட்டங்கள், உரிமைகள், மக்களாட்சி உத்தரவாதங்கள். எல்லாம் தேடித்தேடி ஒவ்வொன்றாய்க் கொல்லப்பட்டது இவற்றின் பிணங்களோடு தங்கள் பிணங்களையும் மணிப்பூர் மக்கள் சுமந்து தெருத்தெருவாய் அலைய அத்தெருக்களும் ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியேயும் இடுகாட்டுக்குள்ளும் இருண்டுபோன புத்தியோடு அலைகின்றன. காலம் மனநிலை முற்றிலும்கெட்டு நாள்களின் நொடிகளின் கழுத்தைத் திருகிக் கொன்று குருதி பருகியது. இரவுகளின் தொண்டைக்குழியிலிருந்து வன்புணர்வுக்குள்ளான பெண்களின் அலறல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது நாடாளுமன்ற நாற்காலிகளுக்குக் கீழே நசுங்கி உயிர்போகும் நிலையில் கிடக்கும் மக்களாட்சியத்தின் வாயைத் திறந்து யார் ஒரு முடக்குத் தண்ணீர் ஊட்டுவார்கள்?