tamilnadu

img

ம.பி.யில் மாற்றுத்திறனாளி முஸ்லிமின் வீட்டை சூறையாடிய மதவெறிக் கும்பல்

கார்கோன், (மத்தியப்பிரதேசம்), ஏப்.17- மத்தியப் பிரதேசத்தில் ராமநவமியை முன்னிட்டு நடந்த கொண்டாட்டங்களின்போது கார்கோன் பகுதியில் சில கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதில், பலரது வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த நிலையில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் சமூக ஊடக செயலியில் வெளியான செய்தியில், கலகக்காரர்கள் கார்கோன் நகரின் புறநகர் பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கார்கோனில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் குக்டல் கிராமத்திற்குச் சென்று, அப்துல் ஹமீது என்ற கண்பார்வையற்ற (மாற்றுத்திறனாளி) நபரை தாக்கினர்.  இதுகுறித்து அப்துல் ஹமீது கூறுகையில், “திடீரென சிலர் எங்களது வீட்டுக்குள் புகுந்தனர். கலகக்காரர்களுக்கு தஞ்சமளித்து உள்ளீர்கள் என்று கூறினர்.

வீட்டில் யாரும் இல்லை என்றோம். ஆனால், எங்களுடைய வீட்டை சூறையாடினார்கள். எங்களையும் அடித்தனர். நிதிநெருக்கடியால், கண்பார்வையற்ற சூழலில் எனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறேன் என்றார்”. காவல்துறையினர் வந்த பின்னரே அப்துலின் குடும்பம் காப்பாற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இந்த வழக்கில் ஹமீது அளித்த புகாரில் தெரிவித்துள்ள முக்கிய நபரான பல்வந்த் ராஜ்புத் தலைமறைவாகிவிட்டார். பல்வந்த் ராஜ்புத், செய்தியாளர் ஒருவரிடம் கூறுகையில், எந்த முஸ்லிமாவது எங்கள் கிராமத்திற்கு வியாபாரம் செய்வதற்காவோ அல்லது ஏதாவது வேலை நிமித்தமாக வந்தாலோ, நாங்கள் அவர்களை அடிப்போம் இது ஒரு இந்து ராஷ்டிரா (நாடு) என்று வெறியுடன் கூறியுள்ளார்.