tamilnadu

img

நீங்கள் நோயாளி அல்ல; எங்கள் விருந்தினர்

அவர் ஒரு இளம் விதவைத் தாய். அந்த  மருத்துவமனையில் தனது 17வயது  மகளை நம்பிக்கையோடு விட்டுச் சென்றி ருந்தார். அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வார். ஐந்து மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமி உயிர் பிழைக்கமாட்டார் என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கடைசி நம்பிக்கையாக இங்கு சேர்த்துவிட்டுப் போனார்.  மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை, சத்தான உணவு, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கவனிப்பு, இயற்கை எழில்மிகு சூழல் என அனைத்தும் சேர்ந்து அந்தச் சிறுமியை, உயிர் பறிக்கும் காசநோயிலிருந்து மீட்டது. கண்களில் நம்பிக்கையோடு, இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட முடியும் என்று கூறுகிறார் அந்தத் தாய்.  ஒரு குடிகார கணவரிடம் சிக்கி தினந்தோறும் அடி, உதை பட்டதோடு; அவரிடமிருந்து எச்ஐவி  தொற்றையும் வாங்கி, குற்றுயிரும் குலையு யிருமாக  வந்து சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மூன்று மாதமாக சிகிச்சை அளித்து உடல்நலனையும் மனநலனையும் தேற்றி யிருக்கிறார்கள் அந்த மருத்துவமனையின் மருத்துவர் குழுவும் செவிலியர்களும்.  எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்ற நிலையில் வந்து சேர்ந்த முற்றிய புற்றுநோயாளிகள், இந்த மருத்துவ மனையில் தங்கள் நோயை மறந்து சிரித்த முகத்தோடு, புற்றுநோய் தரும் கொடிய வேதனை ஏதும் இல்லாதவர்களாக ஆடிப் பாடி  மகிழ்ந்து கொண்டிருந்தது இதுவரை பார்த்தி ராத காட்சியாக இருந்தது. அது மதுரை மாவட்டம் தோப்பூரில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை. “அன்பு நடமாடும் மருத்துவக் கூடம்” என்றே அங்கு எழுதப்பட்டிருக்கிறது. வெறும் சுவரெழுத்தில் மட்டுமல்ல, அந்த வளாகம் முழுவதும் அன்பு மட்டுமே நடமாடுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டுரையாளர், காசநோய் பாதித்த ஒரு சிறுவனை, கடைசிப் புகலிடமாக இந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, இந்த மருத்துவமனையே காசநோய் பீடித்த நோயாளியைப் போன்று காட்சியளித்தது. உள்ளே நுழையும்போதே அருவருப்பும் குமட்டலுமாக இருந்தது. நோயாளியை சேர்த்து விட்டு தப்பித்து ஓடினால் போதும் என்ற  நிலை இருந்தது. ஆனால் அதே மருத்துவமனை தான் தற்போது அன்பும், அர்ப்பணிப்பும், அரவணைப்பும் நிறைந்த; மருத்துவ உலகின் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட; அரசு மருத்துவமனை என்பதற்கான வழக்கமான எந்த  நெடியும் இல்லாத; ஒரு கார்ப்பரேட் மருத்துவ மனைக்கு இணையான தேசியத் தரத்துடன் நோய் தீர்த்து, நோயாளிகளின் உடலையும் மனதையும் செப்பனிட்டு, உடலை உருக்கும் எலும்புருக்கி நோய் எனப்படும் காசநோய் உட்பட அனைத்திலிருந்தும் மீண்டு புது வாழ்வு  வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அனுப்புகிறது.  இந்தக் கட்டுரையாளர், இம்மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள நேர்ந்த போது கண்ட காட்சிகள்தான் இவை.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை யின் நிர்வாகத்திற்குட்பட்ட இந்த மருத்துவ மனையில் 345 படுக்கை வசதிகள் உள்ளன. 1960ல் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, அன்றைக்கு காலரா, அம்மை, காசநோய் போன்ற உயிர்ப்பறிக்கும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்ப தற்காக, நகரத்திற்கு வெளியே ஆஸ்டின்பட்டி எனும் ஆள் அரவமற்ற பகுதியில் அமைக்கப் பட்டது. இந்த மருத்துவமனைக்குச் சென்றாலே திரும்பி உயிருடன் வர முடியாது; மேற்கண்ட நோய்கள் சாபம்; இந்த நோய்கள் பீடித்த நபர்கள் தீட்டுப்பட்டவர்கள் என்றெல்லாம் அக்காலத்தில் மக்களிடையே அச்சம் பரவி யிருந்தது. இப்போது காசநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்துகள் வந்து விட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதிப்பு, தூசி நிறைந்த தொழில்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல் உட்பட பல்வேறு காரணிகளால் காச நோய் பாதிப்பு குறையவில்லை. இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் செயல்படும் அரசு  மருத்துவமனைகளின் ஒரு பகுதியாக தாம்பரம், மதுரை தோப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட  சில இடங்களில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. 

இந்த மருத்துவமனைகளில், கடந்த பத்தாண்டுகளாக மிகச்சிறந்த சேவையை அளித்து வருகிறது தோப்பூர் அரசு மருத்துவ மனை. கோவிட் தொற்று பாதித்த காலத்தில் மதுரை மற்றும் சுற்று வட்டார மக்கள் ஏராள மானோரின் உயிரைப் பாதுகாத்ததில் தன்னி கரற்ற சேவையை ஆற்றியது இந்த மருத்துவ மனை.  தமிழ்நாட்டின் எல்லா அரசு மருத்துவமனை களும் இத்தனை தரத்துடன் இருக்கிறது என்று  சொல்லிவிட முடியாது. ஆனால் ஒதுக்கப் படும் சிறு அளவு நிதியைக் கொண்டு இந்த மருத்துவமனை மட்டும் நிகரற்ற தரத்திற்கு உயர்ந்திருக்கிறது என்றால் இங்கு பணி யாற்றும் தலைமை மருத்துவர், மருத்துவர் குழு, செவிலியர்கள் மற்றும் 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டே இருக்கும் தூய்மைப் பணியாளர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் ஆகியோரின் எவ்வித முகச்சுழிப்புமற்ற அர்ப்பணிப்பு மட்டுமே.  ஒரு அரசுத்துறை நிறுவனத்தை, அரசின் திட்டங்களை மிகத் துல்லியமாக எப்படி செயல்படுத்த முடியும் என்பதற்கு நிச்சயம் இந்த மருத்துவமனையை ஒரு சிறந்த உதாரண மாகக் குறிப்பிடலாம். திட்டமிடல், நிதி ஒதுக்கீட்டை மிகச் சரியாக பயன்படுத்துதல், அனைத்து ஊழியர்களிடையேயும் சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்பு உணர்வை யும் உருவாக்குதல், புதிய புதிய வடிவங்களில் திட்டங்களை செயல்படுத்துதல் - என பன்முகத் திறனும் அதை செயல்படுத்தும் ஆற்றலும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருந்தால் ஒவ்வொரு அரசுத்துறையையும்  அன்பு நிறைந்த துறையாக மாற்ற முடியும். 

இதை தோப்பூர் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிற ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளின் கண்களில் மிளிரும் மகிழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இந்த மகிழ்ச்சியை உறுதி செய்த தமிழ்நாடு அரசுக்கு ஒரு சபாஷ் போடலாம்.  முற்றிய காசநோய், அம்மை, காலரா,  மரணத்தின் விளிம்பில் உள்ள புற்றுநோயாளி கள், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என - இயல்பு நிலைக்கு மாறான நோயாளிகள் நிறைந்த இந்த மருத்துவமனையில் ஒரு செவிலியரிடம் கூட முகத்தில் எரிச்சலோ, அலட்சியமோ தென்படவில்லை. அது எப்படி என்று கேட்ட போது அந்த செவிலியர்களே பதிலளித்தார்கள் : “இங்கே வருபவர்கள் நோயாளிகள் அல்ல; எங்கள் உறவினர்கள்; எங்கள் விருந்தினர்கள்”.  இப்படிச் சொன்ன செவிலியர்களில் சிலர் நிரந்தர ஊழியர்கள். பலர் நிரந்தர ஊழியர்கள் அல்ல. ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்களே! அரசுத் திட்டங்களை எப்படி மிகச்சிறப்பாக செயல்படுத்த முடியும்; ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றுபவர்களை நிரந்தரப்படுத்தி னால், நேரடியாக இதுபோன்ற மருத்துவ மனைகளுக்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி னால் இன்னும் எப்படியெல்லாம் படைப்பாக்கத் திறனுடன் மேம்படுத்த முடியும் என்பதை நேரில் ஆய்வு செய்ய; தமிழ்நாட்டின் பிற அரசு  மருத்துவமனைகளுக்கும், பிற அரசுத் துறைகளுக்கும் இந்த அனுபவங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர், திட்ட அம லாக்கத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் ஒருமுறை இங்கு வந்து சென்றால் புதிய சிந்தனைகள் பிறக்கும்.

- எஸ்.பி.ராஜேந்திரன்