tamilnadu

img

பெண்களை அரசியல் களத்திற்கு கொண்டு வந்த ‘‘முதல் அம்மா’’ - எம்.ஜே.பிரபாகர்

மக்கள் அண்ணாந்து பார்த்து வியந்த நட்சத்திரம். மக்கள் எனும் கடலில் கலந்து, தமிழக சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் முன் நின்று போராடிய, மக்கள் விடுதலைக்கான மக்கள் கலைஞர் என்று அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட கே. பி. ஜானகி அம்மாள் வரலாறு தான் இந்த நூல். மார்ச் 1-ஆம் தேதி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள் 32-ஆவது நினைவு நாள் ஆகும். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டக் களத்தில் மக்கள் நாடகம் எனும் கலையை ஆயுதமாக பயன்படுத்தினர். அப்போது நடைபெற்ற  அனைத்து போராட்டங்களிலும் நாடக நடிகையாக உருவானவர்தான் அம்மா என்று அழைக்கப்படும் கேபி ஜானகி அம்மாள். மக்கள் விடுதலைக்காக தனது புகழ்பெற்ற நட்சத்திர வாழ்க்கையை  கைவிட்டதோடு, தனது சொத்துக்கள் அனைத்தையும் மக்கள் போராட்டங்களுக்காக அர்ப்பணித்தார் கே.பி.ஜானகி அம்மாள். தொழிலாளர் வர்க்க இலட்சியத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகி கே.பி.ஜானகி அம்மாள். பல ஆண்டுகள் சிறை கம்பிகளில் வாழ்ந்த புரட்சிகர வீராங்கனையின் வரலாறுதான் இந்த நூல்.

பெண்கள் என்றாலே தாழ்வாக கருதப்பட்ட காலங்களில் துணிச்சலுடன், அரசியல் களத்திற்கு வந்ததோடு நாடகக் கலையின் மூலம் மக்களிடம் சுதந்திரப் போராட்டத் தீயை வளர்த்தவர் மாபெரும் மக்கள் தலைவர். சாதிய, மதப்பிடிப்பு பலமாக வேரூன்றி  இருந்த காலத்தில் தன்னோடு பயணித்த குருசாமியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதோடு, சாதிய எதிர்ப்பு, பெண் விடுதலை, பெண் முன்னேற்றம், பெண் சமத்துவம் குறித்து தனது பிரச்சாரங்களில் முன்னெடுத்துச் சென்றவர் தான் கே.பி.ஜானகி அம்மாள். மக்கள் விடுதலைக்கும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கும் பாதுகாப்பு சட்டப்படி தென்னிந்தி யாவிலேயே  முதன் முதலாக கைது செய்யப்பட்ட பெண் அரசியல்வாதிதான் கே.பி.ஜானகி அம்மாள். மிக அதிகமான விலைவாசி உயர்வு, கள்ள மார்க்கெட் சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனை போன்றவற்றை எதிர்த்து போராடியதோடு, பதுக்கல்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களை கண்டறிந்து, மக்களுக்கு வினியோகித்த போராளி அவர். இந்தப் போராட்டத்தில் பெண்களை பெருமளவில் ஈடுபடச் செய்தவர் கே.பி.ஜானகி அம்மாள்.  இதுவரை அரசியல் இயக்கங்கள் பெண்களை போராட்டங்களில் ஈடுபடுத்தவில்லை. 1940-ஆம் ஆண்டுகளின் போது பணிப்பெண்கள், அரசியல் இயக்கத்திற்கும், விவசாய இயக்க, தொழிற்சங்க இயக்கத்திற்கும், பெண்களை ஈடுபடச் செய்ததில் கே.பி.ஜானகி அம்மாளின் பங்கு மிக அளப்பரியதாகும். மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக மதுரை மாநகர் வார்டு கவுன்சிலராகவும் சமயநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக மக்கள் சேவை ஆற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்றுவித்த ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆவார். மாற்று அரசியல் சிந்தனை கொண்டவர்களும், தியாக வாழ்க்கை வாழ்ந்த கே.பி.ஜானகி அம்மாள் வரலாற்று நூலை படிக்க வேண்டியது அவசியமாகும். இந்த வரலாற்று நூலினை கொண்டு வந்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் மற்றும் மீள்வெளியீடு செய்த சவுத் விசன் புத்தக நிறுவனத்தாருக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

‘அம்மாவின் கதை’
நூலாசிரியர்: என்.ராமகிருஷ்ணன்
விலை: ரூ.50/- 
வெளியீடு : சவுத் விஷன் புக்ஸ்,  
சென்னை -600091
தொடர்பு எண்: 9445318520