tamilnadu

மழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்கிடுக! விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டத்திற்கு சிபிஎம் முழு ஆதரவு

சென்னை,ஜன.4- 11 மாவட்டங்களில் ஜனவரி 5 முதல் விவசாயிகள் நடத்தும் தொடர் காத்திருக்கும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் வாரக்கணக்காக தண்ணீர் தேங்கி மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 5 லட்சம் ஏக்கரில் வேளாண்மை பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் எவ்வித வேலைவாய்ப்புமின்றி வருமானம் இல்லாமல் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மழை நிவாரண பணிகளுக்காக இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறது.